ஜெய்ப்பூர்: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமணம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. வெங்கட்டா தத்தா சாய் என்பவரை பிவி சிந்து திருமணம் செய்து கொண்டார்.
ராஜஸ்தானில் பிவி சிந்து - வெங்கட்டா தத்தா சாய் திருமணம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது. குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே இந்த திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.

ராஜஸ்தானில் உதய் சாகர் லேக் என்ற பகுதியில் உள்ள ஸீனிக் ராபுல்ஸ் என்ற சொகுசு ஹோட்டலில் பிவி சிந்து திருமணம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 11.20 மணிக்கு புதுமணத் தம்பதிகளான பிவி சிந்து மற்றும் வெங்கட்டா தத்தா சாய் திருமண உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. அந்த நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னணி விளையாட்டு வீரர்கள், திரைத்துறையை சேர்ந்த நடிகர், நடிகையர் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரை அழைத்து இருக்கிறார் பிவி சிந்து.
தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச முதல்வர்களையும் அழைத்து இருக்கிறார். எனவே, சமீபத்தில் நடந்த விளையாட்டு வீரர்களின் திருமணத்திலேயே பிரம்மாண்டமானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பிவி சிந்துவின் கணவர் வெங்கட்டா தத்தா சாய் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். அவர் பெங்களூருவில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் டேட்டா சயின்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், கணக்கியல் மற்றும் நிதித்துறையில் இளங்கலைப் பட்டம் (BBA) பெற்றுள்ளார்.
ஜேஎஸ்டபுள்யூ (JSW), சோர் ஆப்பிள் அசெட் மேனேஜ்மென்ட் (Sour Apple Asset Management) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியின் நிர்வாகத்திலும் பங்கேற்று இருக்கிறார்.