சென்னை : நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வென்றார். செஸ் உலகின் விம்பிள்டன் என்று அழைக்கப்படும் டாடா ஸ்டீல் மாஸ்டர் தொடர் நெதர்லாந்தில் நடைபெற்றது.
இதில் டைப் பிரேக்கர் சுற்றில் நடப்பு உலக சாம்பியன் குகேசை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் 2006 ஆண்டு விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.

உலகின் டாப் 14 வீரர்கள் ரவுண்ட் ராபின் முறைப்படி தங்களுக்குள் 13 சுற்றுகளில் மோதினர். இதில் பிரக்ஞானந்தாவும், குகேஷும் தான் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் கடைசி போட்டியில் வந்து தோற்றனர். இதன் மூலம் இருவரும் எட்டரை புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் சரி சமமாக இருந்தனர். இதனை அடுத்து வெற்றியாளர்களை தீர்மானிக்கும் டைப் பிரேக் சுற்றில் முதலிடத்தில் இருந்த பிரக்ஞானந்தாவுக்கும் குகேஷுக்கும் இடையே நடைபெற்றது.
இதில் குகேஷ் வெள்ளை நிற காய்களை வைத்து விளையாடி வெற்றி பெற்றார். இந்த நிலையில் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் குகேஷ் சமன் அடைந்து இருந்தாலே அவர் சாம்பியன் பட்டத்தை வென்று இருப்பார். எனினும் பிரக்ஞானந்தா இரண்டாவது டை பிரேக்கர் ஆட்டத்தில் அபாரமாக விளையாடி குகேஷ்க்கு அதிர்ச்சி அளித்தார்.
குகேஷ் டிராவை பற்றி யோசிக்காமல் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் காய்களை நகர்த்த அதை பிரக்ஞானந்தா தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வீழ்த்தினார். இதன் மூலம் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தான் செய்த தவறை நினைத்து குகேஷ் கண்கலங்கி தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தினார். உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு குகேஷ் பங்கேற்ற முதல் தொடரில் அவர் தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி ஒன்பதாவது இடத்தை பிடித்தார்.