கோல்ட் கோஸ்ட் : காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் ஆடவர் 85 கிலோ எடைப் பிரிவில், 20 வயதாகும் இந்தியாவின் ஆர் வி ராகுல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு 4வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில், 21வது காமன்வெல்த் போட்டிகள் நடக்கின்றன. முதல் நாளில் மகளிர் பளுதூக்குதல் 48 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார். இரண்டாவது நாளான நேற்று மகளிர் 53 கிலோ எடைப் பிரிவில், சஞ்சிதா சானு புதிய சாதனையுடன் தங்கம் வென்று அசத்தினார். அவரைத் தொடர்ந்து, ஆடவர் 69 கிலோ எடைப் பிரிவில், 18 வயதாகும் தீபக் லேதர் வெண்கலம் வென்றார்.
இன்று நடந்த ஆடவர் பளுதூக்குதலில் 77 கிலோ எடைப் பிரிவில் வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை ஐந்து பதக்கம் கிடைத்துள்ளது. அனைத்தும் பளுதூக்குதலில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆடவர் 85 கிலோ எடைப் பிரிவில் ஆந்திராவைச் சேர்ந்த 20 வயதாகும் ரகலா வெங்கட் ராகுல் தங்கம் வென்று அசத்தினார். ராகுல், ஸ்னாட்ச் பிரிவில் 151 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 187 கிலோ என, மொத்தம் 338 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
கடந்தாண்டு நடந்த காமன்வெல்த் சீனியர் பளுதூக்கும் சாம்பியன் பிரிவில் தங்கம் வென்ற ராகுல், ஸ்னாட்ச் பிரிவில் முதல் வாய்ப்பிலேயே, 147 தூக்கினார்.
இரண்டாவது வாய்ப்பில் 151 கிலோ தூக்க முயன்று தோல்வியடைந்தார். ஆனால், மூன்றாவது வாய்ப்பில் 151 கிலோ தூக்கி அசத்தினார். கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் முதல் வாய்ப்பில் 182 கிலோ தூக்கி முதலிடத்துக்கு முன்னேறினார். அதன்பிறகு, இரண்டாவது வாய்ப்பில் 187 கிலோ எடையை தூக்க, தங்கம் உறுதியானது. மூன்றாவது வாய்ப்பில், 191 கிலோ எடையை முயற்சித்து தோல்வியடைந்தார்.