புடாபெஸ்ட்: 40 ஆண்டு கால உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வரலாற்றில் முதல்முறையாக தங்கம் வென்று இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதித்துள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இவருக்கு சக இந்தியர்களான கிஷோர் ஜீனா மற்றும் டிபி மனு ஆகியோரும் இறுதிப் போட்டியில் விளையாடினார்கள். இதுவரை உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவின் எந்த வீரரும் தங்கப் பதக்கம் வென்றதே இல்லை. கடந்த ஆண்டு நீரஜ் சோப்ரா கூட வெள்ளிப்பதக்கமே வென்றிருந்தார்.

நீரஜ் சோப்ராவுக்கு பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் உள்ளிட்டோரால் சவால் இருந்தது. ஏனென்றால் நீரஜ் சோப்ராவின் முதல் சில எறிதல்கள் பலமானவையாக இருக்கும். ஆனால் பாகிஸ்தானின் அர்ஷாத் நதீமின் சிறந்த ஆட்டம் கடைசி நேரத்தில் தான் வெளிப்படும். அந்த வகையில் 2வது எறிதலை நீரஜ் சோப்ரா வீசிவிட்டு, அந்த ஈட்டி எந்த இடத்தில் சென்று குத்தி நின்றது என்று கூட பார்க்கவில்லை. உடனடியாக ரசிகர்களை பார்த்து கர்ஜனை செய்த ஈட்டியை திரும்பி பார்த்தார். அந்த நொடியிலேயே தெரிந்துவிட்டது நீரஜ் சோப்ராவுக்கு தங்கம் உறுதி என்று..
ஏனென்றால் ஒலிம்பிக் தொடரிலும் நீரஜ் சோப்ராவின் செயல்பாடுகள் இப்படிதான் இருந்தது. இதில் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டி, 88.17 மீட்டர் தூரம் சென்று விழுந்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் 87.58 மீட்டர் தூரம் வீசிய நீரஜ் சோப்ரா, தற்போது 88.17 மீ தூரம் வீசி தங்கத்தை உறுதி செய்தார். இந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வென்றதன் மூலம் நீரஜ் சோப்ரா வெல்லாத பதக்கங்களே இல்லை என்று நிலை உருவாகியுள்ளது.

நீரஜ் சோப்ராவுக்கு முன் 80 மீட்டர் தூரம் ஈட்டி எறியும் வீரர்களை பெரியளவில் பார்க்க முடியாது. அப்படியே 80 மீட்டர் தூரம் எறிந்தாலும், அவர்களால் தொடர்ச்சியாக அவ்வளவு தூரம் வீச முடியாது என்ற நிலை தான் இருந்தது. ஆனால் நீரஜ் சோப்ரா தனது வாழ்க்கையில் 10 முறை 88 மீட்டருக்கு அதிகமாகவும், 26 முறை 85 மீட்டர் தூரத்திற்கு அதிகமாகவும், 37 முறை 82 மீட்டருக்கு அதிகமாகவும் வீசியுள்ளார்.
பாகிஸ்தானின் அர்ஷாத் போல் பெரிய உடல்வாகு இல்லையென்றாலும், நீரஜ் சோப்ராவின் வெற்றிக்கு அவரின் சீரான ஆட்டமே காரணமாக அமைந்துள்ளது. சில நேரங்களில் நம்பர்கள் உண்மையை சொல்லாது என்று கூறுவார்கள். ஆனால் நீரஜ் சோப்ராவின் வாழ்க்கையில் நம்பர்கள் சரியான கதையை சொல்கிறது. சிறப்பாக ஒரு முறை எறிந்துவிட்டு அடுத்த முறை மோசமாக வீசும் வீரர் அல்ல நீரஜ் சோப்ரா. அவரின் வெற்றியே ஒவ்வொரு முறையும் சீரான முறையில் செயல்படுவதில் தான் உள்ளது.