ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியாவிற்கு ஏமாற்றமே நீடித்து வருகிறது. முன்னணி வீரர்கள் உட்பட அனைவரும் தோல்வியை சந்தித்து வருகின்றனர்.
வில்வித்தை:
பெண்களுக்கான தனிநபர் வில்வித்தை போட்டியில் லக்ஷ்மிராணி மன்ஜிஹி முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

டபிள் டிராப்:
டபிள் டிராப் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் முதல் தகுதிச் சுற்றில் அசத்திய இந்திய வீரர்கள் மனாவ்ஜித், செனாய் அடுத்த தகுதி சுற்றில் தோல்வியடைந்தார். இவர் மொத்தமாக 115 புள்ளிகள் பெற்று அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
இந்த போட்டியில் இத்தாலியின் ஜியோவானி 122 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார். பிரிட்டன் வீரர் எட்வர்ட் லிண்ட் (120) இரண்டாவது இடமும், குரோசியாவின் ஜோசிப் கிலாஸ்னோவிச் (120) மூன்றாவது இடமும் பிடித்தனர்.
துப்பாக்கிச் சுடுதல்:
இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 4-வது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
ஹாக்கி:
ஜெர்மனிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி 1- 2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
நீச்சல்:
ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில், இந்திய வீரர் சஜன் பிரகாஷ் 4-வது இடம் பிடித்தார். இருப்பினும் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அவர் இழந்தார்.
அதேபோல், பெண்களுக்கான 200 மீட்டர் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சிவானி கடாரியா அரையிறுதி போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தார். அவர் 2:09:30 நிமிடங்களில் இலக்கை 2வது ஆளாக அடைந்தார். இருப்பினும் மற்ற வீராங்கனைகள் குறைந்த நிமிடங்களில் இலக்கை கடந்ததால், அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.