டெல்லி: உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு முறையீடு செய்துள்ளதால் நர்சிங் யாதவ் ரியோவில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒலிம்பிக்கில் ஆடவர் 74 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் நர்சிங் யாதவை இடைநீக்கம் செய்து இருந்தது.

இது குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் நர்சிங் யாதவ் ஆஜராகி மூன்று மணி நேரம் விளக்கம் அளித்தார். இதனையடுத்து நர்சிங் யாதவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதால், ரியோ ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு முகமை இந்த விவகாரம் குறித்து மேல்முறையீடு செய்துள்ளது. எனவே நர்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள நர்சிங் யாதவிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இந்த விசாரணையின் முடிவில் அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, ரியோவில் நாளை மறுநாள் நர்சிங் யாதவ் போட்டியில் கலந்து கொள்வது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.