ரியோ டி ஜெனிரோ: வில்லுக்கு விஜயன் என்பார்கள்... அர்ஜூனன் வச்ச குறி தப்பாது... அதேபோல வில் வித்தையில் உலகின் நம்பர் 1 இடத்தில் இருக்கும் வீரர் கிம் வூ ஜின். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என்று அதிக நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த வீரர் தற்போது அதிர்ச்சி தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்.
ரியோ டி ஜெனிரோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நாளான நேற்று ஆண்களுக்கான வில்வித்தை தனிநபர் பிரிவுக்கான போட்டி நடந்தது.

இதன் இரண்டாவது சுற்றில் உலகின் நம்பர் 1 இடத்தில் உள்ள தென் கொரியாவின் வில்வித்தை வீரர் கிம் வூ ஜின், இந்தோனேசியா வீரர் ரிய இக அகதா உடன் மோதினார்.
வில் வித்தை வீரர்
போட்டி தொடங்கியது முதலே இந்தோனேசிய வீரர் அகதா ஆதிக்கம் செலுத்தினார். இந்த போட்டியில் அகதா 6-2 என்ற புள்ளி கணக்கில் கிம் வூ ஜினை வீழ்த்தி அசத்தினார்.
பதக்கக் கனவு தகர்ந்தது
இதன் மூலம் தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பர் 1 வீரர் கிம் வூ ஜின் போட்டியிலிருந்து வெளியேறினார். அகதா மூன்றாவது சுற்றில் இத்தாலியின் மவ்ரோ நெஸ்போலியுடன் மோத உள்ளார்.
உலக சாதனை
கடந்த சனிக்கிழமை நடந்த ஆண்களுக்கான குழு வில்வித்தை போட்டியில் கிம் வூ ஜின் இடம்பெற்றிருந்த தென் கொரிய அணி தங்கப் பதக்கத்தை வென்றிருந்தது. இதில் உலக சாம்பியன் கிம் வூ ஜின் புதிய உலக சாதனை படைத்தார்.
அசத்தல் புள்ளிகள்
துல்லியமாக செயல்பட்ட அவர் 72 முறை அம்பு எய்தும் சுற்றில் மொத்தம் 700 புள்ளிகள் குவித்து அசத்தினார். இதற்கு முன்பு லண்டன் ஒலிம்பிக்கில் சக நாட்டவர் இம் டோங் ஹியூன் இந்த பிரிவில் 699 புள்ளிகள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
அதிர்ச்சி தோல்வி
லண்டன் ஒலிம்பி சாதனையை முறியடித்த 24 வயதான கிம் வூ ஜின், உலக சாதனை படைத்தது முக்கியமானது தான். ஆனால் அதை விட வரும் ஆட்டங்கள் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார். வில்வித்தை தனிநபர் பிரிவில் விளையாடிய கிம் வூ ஜின் தோல்வி அடைந்து வெளியேறியது தென் கொரிய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.