ரியோவில் போதை கும்பல்
ரியோ ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் சின்னத்தையே கோகையின் பாக்கெட்டுகளில் அச்சடித்து, போதை மருந்து கும்பல் விற்பனை செய்வது பிரேசில் அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் சின்னத்துடன் போதை பாக்கெட்
ஒலிம்பிக் போட்டியின் அடையாளமே அதன் சின்னம்தான். அன்பையும் சமதானத்தையும் வலியுறுத்தியும் 5 கண்டங்களையும் குறிக்கும் வகையில் 5 வளையங்கள் பின்னி பிணைந்திருப்பது போல ஒலிம்பிக் சின்னம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
93 கோகையின் பாக்கெட்டுகள்
ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள மரக்காணா மைதானத்தின் அருகிலேயே ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட கோகையின் பாக்கெட்டுகளை ரியோ போலீஸ் பிடித்துள்ளது. கைப்பற்றப்பட்ட 93 பாக்கெட்டுகளிலும் ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்டிருக்கிறது.
எச்சரிக்கை வாசகம்
எந்த ஒரு ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலும் இப்படி ஒரு அவலம் நிகழ்ந்தது இல்லை. ஆனால் ஒரு நல்ல விஷயத்தை அந்த பாக்கெட்டில் போதை கும்பல் செய்திருக்கிறது. 'குழந்தைகளிடம் இருந்து இந்த பாக்கெட்டுகளைத் தள்ளி வையுங்கள்' என்ற வாசகத்தை மறக்காமல் பாக்கெட் மீது அச்சடித்திருக்கிறதாம்.
போலீஸ் தீவிர சோதனை
ரியோ நகரம் முழுவதும் பரவலாக ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படலாம் போலீஸ் சந்தேகிக்கிறது. ஒலிம்பிக் சின்னம் பதிக்கப்பட்ட கோகையின் பாக்கெட்டுகளை பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிரேசில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.