ரோட்டாக்: ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், சக மல்யுத்த வீரர் சத்யவார்ட் என்பவரை விரைவில் மணக்க இருக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் அரியானாவில் நடைபெற்றது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக். இதன் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை சாக்ஷிக்கு கிடைத்தது.

24 வயதான சாக்ஷி, தனது சக மல்யுத்த வீரர் சத்யவார்ட் காடியனைக் காதலித்து வந்தார். சத்யவார்ட், சாக்ஷியை விட 2 வயது இளையவர். இவர் 2010-ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர்.
இவர்களது காதலுக்கு இருவீட்டுப் பெரியவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அரியானா மாநிலம் ரோட்டாக்கில் உள்ள சாக்ஷி இல்லத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது.
இதில், இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
தற்போது திருமணம் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சத்யவார்ட்டின் தந்தை தெரிவித்துள்ளார்.