
தொடக்கவிழா...
தென் அமெரிக்காவில் நடைபெறும் முதல் ஒலிம்பிக் போட்டி என்ற சிறப்புடன் இன்று இரவு அந்நாட்டு நேரப்படி இரவு 8 மணிக்கு மரகானா கால்பந்து மைதானத்தில் ஒலிம்பிக் திருவிழாவின் தொடக்கவிழா நடைபெறுகிறது. இதில் அந்நாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெறுகிறது.

ஒலிம்பிக் தீபம்...
இது தவிர தொடக்க விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று மைதானத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கொப்பரையில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றுவது ஆகும். இந்த கவுரவத்தை பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு வழங்க போட்டி அமைப்பாளர்கள் முன்வந்துள்ளனர். ஆனால் தனது பெயரை பயன்படுத்தும் முழு உரிமையை அமெரிக்க கம்பெனிக்கு வழங்கியுள்ள பீலே, அந்த நிறுவனம் அனுமதித்தால் நிச்சயம் தீபத்தை ஏற்றுவேன் என்று கூறியுள்ளார். என்றாலும் அவர் தான் தீபத்தை கடைசியாக ஏந்தி வந்து ஏற்றி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரர்களின் அணிவகுப்பு...
இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் இன்னொரு முக்கிய விஷயம் அதில் பங்கேற்கும் அணிகளின் அணிவகுப்பாகும். இம்முறை 205 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்த அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். இதில், இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா நமது தேசிய கொடியை ஏந்திச் சென்றபடி தலைமை தாங்க இருக்கிறார்.

முதல்நாடாக கிரீஸ்...
இந்த அணிவகுப்பில் முதல் நாடாக ஒலிம்பிக் தாயகமான கிரீஸ் செல்லும். அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி ஒவ்வொரு அணியாக வீறுநடை போடும். இந்த பட்டியலில் இந்தியா 95-வது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக கலந்து கொள்ளும் 10 பேர் கொண்ட அகதிகள் அணி ஒலிம்பிக் கொடியின் கீழ் வலம் வரும். போட்டியை நடத்தும் பிரேசில் அணிவகுப்பில் கடைசி நாடாக செல்லும். எனவே, அதற்கு முன்பாக அகதிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

78 ஆயிரம் விருந்தினர்கள்...
தொடக்க விழா நிகழ்ச்சியைக் காண உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று மொத்தம் 78 ஆயிரம் பேர் பிரேசிலுக்குச் சென்றுள்ளனர். இந்த தொடக்க விழா நிகழ்ச்சியானது சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதக்கங்களுக்கு போட்டி...
வழக்கம் போல இம்முறை ஒலிம்பிக்கிலும் பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க அமெரிக்கா, சீனா நாடுகளிடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா 292 பெண்கள் உள்பட 554 பேருடனும், சீனா 413 பேருடனும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறது. போட்டியை நடத்தும் பிரேசில் அணி 465 பேரை களம் இறக்குகிறது. இந்திய அணி சார்பில் இம்முறை 118 பேர் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

எதிர்பார்ப்பு...
முந்தைய லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 83 பேர் பங்கேற்று இருந்தனர். அந்த ஒலிம்பிக்கில் 6 பதக்கங்கள் கிடைத்தன. இம்முறை இன்னும் கூடுதலாக விளையாட்டு வீரர்கள் களமிறக்கப் படுவதால் பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்...
ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதையொட்டி பிரேசிலில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 85 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர ஒலிம்பிக் போட்டி தொடர்பான பணிகளில் அரசு அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள், தனியார் ஊழியர்கள், 50 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் என்று மொத்தம் 90 ஆயிரம் பேர் ஒலிம்பிக் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நமது நேரப்படி...
ஒலிம்பிக் தொடக்கவிழாவானது பிரேசில் நேரப்படி இன்று இரவு 8 மணிக்குத் தொடங்கினாலும், இந்திய நேரப்படி அது நமக்கு நாளை அதிகாலை 4.30 மணி ஆகும். ஏனெனில் பிரேசிலுக்கும், இந்தியாவிற்கும் இடையே 8.30 மணி நேர வித்தியாசம் உள்ளது. தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் ஒலிம்பிக் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Click it and Unblock the Notifications











