அவங்க முட்டிக்கட்டும், மோதிக்கட்டும்.. நாம எடுக்கலாம் வா செல்பி!
ரியோ டி ஜெனீரோ: வட கொரியாவும், தென் கொரியாவும் முட்டி மோதிக் கொண்டிருப்பது உலகம் அறிந்த விஷயம். இந்த நிலையில் ரியோ ஒலிம்பி்க்கில் ஒரு பாசப் பிணைப்பை கண்ணுற்று அனைவரும் நெகிழ்ந்தனர். நெட்டிசன்களும் இதுதொடர்பான புகைப்படத்தை பார்த்து ரசித்து ஷேர் செய்து வருகின்றனர்.
விளையாட்டு எதையும் சாதிக்கும் என்பார்கள்.. அதை இந்த வட கொரிய, தென் கொரிய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகள் நிரூபித்துள்ளனர். இருவரும் நாடாக பிரிந்து கிடந்தாலும் உணர்வுகளால் ஒன்றுபட்டு எடுத்துள்ள செல்பி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இந்தப் புகைப்படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் இயான் பாமர் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு இதற்காகத்தான் நமக்கு ஒலிம்பிக் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகள்
தென் கொரியாவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை லீ யூன் ஜு. அதே போல வட கொரியாவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை ஹாங் உன் ஜாங். இருவரும் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்துள்ளனர்.
வந்த இடத்தில் செல்பி
போட்டியின்போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். நேசமுடன் பேசினர். பின்னர் இருவரும் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர் வி சிம்பல் காட்டியபடி இருவரும் எடுத்துக் கொண்ட செல்பி படம் தற்போது வைரல் ஆகியுள்ளது.

2ம் உலகப் போருக்குப் பின்னர்
2ம் உலகப் போரின் இறுதியில் கொரியா இரண்டாகப் பிரிந்தது. அன்று முதல் இரு நாடுகளும் எதிரும் புதிருமாகவே உள்ளன. தென் கொரியா வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் வட கொரியாவில் சர்வாதிகாரம் மட்டுமே தலைவிரித்தாடுகிறது.

உணர்வுகள் பிரியவில்லை
இரு நாடுகளின் அரசுகள்தான் மோதிக் கொண்டுள்ளனவே தவிர மக்களின் உணர்வுகள் பிரியவில்லை. எப்போது ஒன்று சேருவோம் என்ற எண்ணம்தான் பெரும்பாலான மக்களின் மனதில் உள்ளது. அதைத்தான் இந்த செல்பி படம் நிரூபிப்பதாக அமைந்துள்ளது.

லீ புதுமுகம்
தென் கொரிய வீராங்கனை லீ ஒலிம்பிக்குக்கு புதுமுகம் ஆவார். ஹாங் பழம்பெரும் ஒலிம்பிக் வீராங்கனை. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வால்ட் பிரிவில் தங்கம் வென்று அசத்தியவர். அவர்தான் தங்கம் வென்ற முதல் வட கொரிய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications