ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் நடந்து வரும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 4 வது தங்கப்பதக்கத்தை வென்று அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் சாதனை படைத்துள்ளார்.
ரியோ டி ஜெனிரோவில் நடந்து வரும் 31வது ஒலிம்பிக் போட்டியின் நீச்சல் பிரிவில் அமெரிகக்வைச் சேர்ந்த மைக்கேல் பெல்ப்ஸ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் இது பெல்ப்ஸின் 22வது தங்கப்பதக்கம் ஆகும்.

ஆண்களுக்கான தனிநபர் 200 மீட்டர் மெட்லே நீச்சல் பிரிவு போட்டியில் பங்கேற்று 1 நிமிடம் 54 நொடிகளில் இலக்கை அடைந்து பெல்ப்ஸ் சாதனை படைத்துள்ளார். ரியோ ஒலிம்பிக் தொடரில் இவர் வென்றுள்ள 4வது தங்கப்பதக்கமாகும்.
ஒலிம்பிக் போட்டியில் 5வது முறையாக பங்கேற்று நாட்டுக்காக தங்கப்பதக்கங்களை குவித்து வருகிறார் தங்கமகன் பெல்ப்ஸ். இவர் கடந்த 2012இல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
2014ம் ஆண்டு ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற மைக்கேல் பெல்ப்ஸ், மீண்டும் சர்வதேச நீச்சல் போட்டியில் களமிறங்கினார். ஆனால் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பெல்ப்ஸுக்கு 6 மாதம் நீச்சல் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. தடைக்காலத்தை நிறைவு செய்த பிறகு இப்போது மீண்டும் உச்சக்கட்ட ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார் பெல்ப்ஸ்.
தனி வீரர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை யாரும் எட்ட முடியாத சாதனை படிகளை கடந்திருப்பது பெருமையாக உள்ளது. ஆனால் இந்த சாதனையை எட்ட நான் கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளேன் என்கிறார் பெல்ப்ஸ்.