எவ்வளவு முக்கினாலும் 'இப்படி' இருக்கும்வரை இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வாங்காது
டெல்லி: ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்லவில்லை என்று புலம்பினால் விளையாட்டுத்துறை இப்படி இருந்தால் எப்படி தங்கம் கிடைக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
பிரேசிலின் ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வெண்கலம் மற்றும் வெள்ளி என வெறும் இரண்டு பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. 120 வீரர், வீராங்கனைகள் இந்தியாவில் இருந்து ரியோ சென்றும் பதக்கம் வெல்ல முடியவில்லை.

இதற்கு விளையாட்டுத் துறை தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரியோவில் நம் வீரர், வீராங்கனைகளுக்கு நடந்த கொடுமைகள் பற்றி தெரியுமா?
- மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் ரியோவுக்கு சென்று திமிறாக நடந்து கொண்டு ஒலிம்பிக் கமிட்டியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
- கோயலுக்கு ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகரின் பெயரை கூட சரியாக எழுதத் தெரியவில்லை. ட்விட்டரில் தீபாவின் பெயரை தவறாக எழுதியதுடன் அவரின் புகைப்படத்திற்கு பதிலாக தனது புகைப்படத்தை வெளியிட்டார் கோயல்.
- தடகள வீராங்கனை ஷ்ரபானி நந்தாவை வாழ்த்தி ட்வீட் போட்டு அவரின் புகைப்படத்திற்கு பதிலாக தத்தீ சந்தின் புகைப்படத்தை வெளியிட்டார் விஜய் கோயல். விளையாட்டுத் துறை அமைச்சருக்கு வீரர், வீராங்கனைகளையே அடையாளம் தெரியவில்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்தனர்.
- ஹரியானா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ் 9 உறுப்பினர்கள் கொண்ட குழுவுடன் பிரேசிலுக்கு சென்றார். அங்கு அவர் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்காமல் போட்டி நடக்கும்போது ரியோ கடற்கரையில் நேரத்தை கழித்தார். ஒரு போட்டியை கூட அவர் பார்க்கவில்லை. அமைச்சரும், அவரது ஆட்களும் ரியோ செல்ல அரசுக்கு ரூ.1 கோடி செலவு ஆனது தான் மிச்சம்.
- ரியோ சென்ற வீரர், வீராங்கனைகளுக்கு சிகிச்சை அளிக்க விளையாட்டுத் துறை சிகிச்சை பற்றி சுத்தமாக தெரியாத இரண்டு ரேடியாலஜிஸ்டுகளை அனுப்பி வைத்தது அரசு. அந்த இருவரும் போட்டி நடக்கும் இடத்திலேயே இல்லையாம். இதனால் சாய்னா நேவால் தனக்கு காயம் ஏற்பட்டபோது ஒலிம்பிக் கமிட்டி டாக்டர்களை அணுகியுள்ளார்.
- தீபா கர்மாகருடன் பிசியோ டாக்டர் ரியோ செல்ல அரசு அனுமதிக்கவில்லை. இவருக்கு எதற்கு டாக்டர், வெட்டிச் செலவு என்று ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. தீபா இறுதிப் போட்டிக்கு தேர்வான பிறகே பிசியோ டாக்டர் ரியோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- ரியோவில் ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு அங்குள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகளுக்கு கடலையும், பீரும் கொடுத்துள்ளனர். இந்த விழாவில் கலந்து கொண்டதால் வீரர், வீராங்கனைகள் கேம்ஸ் வில்லேஜில் அளித்த இரவு உணவை சாப்பிட முடியாமல் பசியோடு தூங்கியுள்ளனர்.
- அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல பணத்தை தண்ணீராக செலவு செய்யும்போது இந்திய அரசோ நம் வீரர், வீராங்கனைகளுக்கு குடிக்கக் கூட சரியாக தண்ணீர் கொடுக்கவில்லை. இப்படி இருக்கும்போது தங்கப் பதக்கம் வாங்கவில்லை என்று வீரர், வீராங்கனைகளை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.
Story first published: Tuesday, August 23, 2016, 13:50 [IST]
Other articles published on Aug 23, 2016


Click it and Unblock the Notifications