ஊக்க மருந்து உட்கொண்டு சிக்கினார் மல்யுத்த வீரர் நரசிங் யாதவ்.. ஒலிம்பிக்கிற்குப் போக முடியாது!
டெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ள மல்யுத்த வீரர் நரசிங் யாதவுக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையின் முடிவு எதிர்மறையாக வந்துள்ளதாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதனால் யாதவ் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. அவருக்குத் தடையும் விதிக்கப்படும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
74 கிலோ கிராம் ப்ரீஸ்டைல் பிரிவில் சிறந்தவர் நரசிங் யாதவ். ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் கலந்து கொள்ளத் தேர்வாகியுள்ளார். இவர் தேர்வு செய்யப்பட்டபோதே அதுகுறித்து சர்ச்சைகள் கிளம்பின.
நாடா அறிவிப்பு
தற்போது இவரிடம் எடுக்கப்பட்ட 2 சோதனை மாதிரிகளின் முடிவுகளை நாடா எனப்படும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் இரு மாதிரிகளின் சோதனைகளும் நெகட்டிவ் என வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தற்போது நாடா அமைப்பின் இயக்குநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டார்
இந்த சோதனை முடிவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவன இயக்குநர் நவீன் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டை பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளதாக நவீன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உண்மைதான், நரசிங் யாதவ், தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் நேற்று ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார் என்றார் நவீன்.

சதி என்கிறார் நரசிங்
இருப்பினும் தனக்கு திட்டமிட்டு ஊக்க மருந்தை சிலர் கலந்து விட்டதாகவும், தான் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்று சிலர் விரும்புவதாகவும் சமீபத்தில் நரசிங் யாதவ் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

போட்டியில் பங்கேற்கத் தடை வரும்
தற்போது ஊக்க மருந்து சோதனையில் நரசிங் யாதவ் தோல்வி அடைந்திருப்பதால் அவரால் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. அவருக்குப் பதில் வேறு ஒருவர் அணிக்குத் தேர்வு செய்யப்படலாம்.

சுஷில் சிங்கை முந்தி வந்தவர்
முன்னதாக இந்திய அணிக்கு நரசிங் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டபோதே பிரச்சினை வெடித்திருந்தது. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்றவரான சுஷில் சிங்குக்குப் பதில்தான் இவரைத் தேர்ந்தெடுத்தனர். இதற்கு சுஷில் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். விடாமல் போராடினார். ஆனால் கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நரசிங் வெற்றி பெற்றிருந்ததால் அந்த அடிப்படையில் அவருக்குத்தான் மெரிட் உள்ளதாக கூறி அவரையே இந்திய மல்யுத்த சங்கம் தேர்வு செய்தது என்பது நினைவிருக்கலாம்.

2 டெஸ்ட்.. இரண்டிலும் தோல்வி
நரசிங் யாதவுக்கு ஜூலை 5ம் தேதி சோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டது. அவருக்கு எடுக்கப்பட்ட ஏ சாம்பிள் சோதனையின் முடிவு பாசிட்டிவ் என வந்தது. ஆனால் பி சோதனையிலும் அது பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இந்த சோதனை முடிவுகள் இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications