ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் தொடரில் மகளிர் வில்வித்தை போட்டியில் இந்திய அணி காலிறுதியில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி கடந்த 5ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று மகளிர் வில்வித்தை போட்டிகள் நடைபெற்றது. இதில், தீபிகா குமாரி, பொம்பல்யா தேவி மற்றும் லக்ஸ்மி ரானி மஜ்ஹி ஆகியோர் கொண்ட இந்திய மகளிர் அணி கலந்து கொண்டது.

மகளிர் அணிகளுக்கான வில்வித்தை 'ரவுண்டு-16' போட்டியில், தகுதி சுற்றில் கொலம்பியா அணியுடன் இந்திய அணி மோதியது. இந்தப் போட்டி வெற்றி பெற்று இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் ரஷ்ய அணியுடன் காலிறுதியில் மோதியது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் சுற்றில் ரஷ்ய அணி வெற்றி பெற்றது. பின்னர் சுதாரித்துக் கொண்டு ஆடிய இந்திய வீரர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளை கைப்பற்றினர்.
இருப்பினும், 4வது சுற்றினை ரஷ்ய அணி தக்க வைத்துக் கொண்டது. இதனால் புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி ரஷ்ய அணியிடம் தோல்வி அடைந்தது. இதில் 4-5 (48-55, 53-52, 53-50, 53-55, 25-24) என்ற கணக்கில் இந்திய அணி ரஷ்யாவிடம் தோல்வியடைந்தது.
காலிறுதியில் ரஷ்ய அணியிடம் டை பிரேக்கரில் இந்திய அணி தோல்வி அடைந்து இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியதன் மூலம் பதக்கக் கனவு தகர்ந்துள்ளது.