ரியோ டி ஜெனிரோ: துப்பாக்கி சுடுதல் ஆடவர் டிராப் பிரிவில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர்கள் மனாவித் சிங் சந்து 17-வது இடத்தையும், கைனான் செனாய் 19-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதனால், இன்று நடைபெறவுள்ள இரண்டாவது நாள் தகுதிச்சுற்றுப் போட்டியில் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆடவர் துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் இந்திய வீரர்கள் மனாவித் சிங் சந்து, கைனான் செனாய் ஆகியோர் கலந்து கொண்டனர். தகுதிச் சுற்றுப் போட்டியில் 33 வீரர்கள் கலந்து கொண்டனர். முதல் மூன்று சுற்றுகளின் முடிவில் சந்து 68 புள்ளிகளும், செனாய் 67 புள்ளிகளும் எடுத்திருந்தனர்.

முன்னதாக முதல் சுற்று முடிந்த நிலையில் சந்து 14-வது இடத்திலும், செனாய் 28-வது இடத்திலும் இருந்தனர். மூன்று சுற்றுகள் நிறைவடைந்த நிலையில். சந்து 23,23,22 என்ற கணக்கில் புள்ளிகள் பெற்றிருந்தார். இதேபோல செனாய் 22,23,22 என்ற கணக்கிலும் புள்ளிகள் எடுத்திருந்தனர். இதன் மூலம், சந்து 17-வது இடத்தையும், செனாய் 19-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது நாள் தகுதிச் போட்டியில் அவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் மேலும், இரண்டு சுற்றுகள் நடைபெறவுள்ளது. இத்தாலி வீரர் ஃபாப்ரிஷி மாஸ்ஸிமோ 75 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரிட்டன் வீரர் எட்வர்ட் லிங் 73 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இத்தாலியைச் சேர்ந்த மற்றொரு வீரரான ஜியோவன்னி பெல்லிலோ 73-புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.