ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் கிராமத்தில் நான் யாருடனும் சண்டை போடவில்லை. யாருடனும் தவறாக நடக்கவில்லை. இதுதொடர்பாக வந்துள்ள புகார்களை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன் என்று கூறியுள்ளார் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல்.
ரியோ டிவி ஜெனீரோவில் முகாமிட்டுள்ள விஜய் கோயல், ஒலிம்பிக் கிராமத்திற்குள் அங்கீகாரம் இல்லாத நபர்களை அழைத்து வருவதாகவும், அதைத் தடுக்க முயன்றால் தகராறு செய்ததாகவும் ரியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். கோயல் இது போல செயல்பட்டால் அவருக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை விஜய் கோயல் மறுத்துள்ளார். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், யார் இந்தக் கடிதத்தை எழுதியது என்று எனக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு கடிதம் எழுத அந்த சாராவுக்கு என்ன தகுதி உள்ளது என்றும் தெரியவில்லை.
அந்தக் கடிதத்தில் என்னைக் குற்றம் சாட்டி எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. யாரைப் பற்றி சொல்லியுள்ளனர் என்றும் தெரியவில்லை. அப்படி எந்த சம்பவமும் நடந்ததாகவும் எனக்குத் தெரியவில்லை.
ஹாக்கி அணியினர் ஆடி வரும் பகுதிக்குச் செல்ல முதலில் எனக்கு அனுமதி தரப்படவில்லை. இதனால் நான் அங்கிருந்து அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டேன். பின்னர் அந்த அனுமதியைக் கொடுத்தனர். நானும் ஆடுகளம் வரை சென்று வீரர்களை உற்சாகப்டுத்தினேன்.
வீரர்களை உற்சாகப்படுத்தத்தான் நாங்கள் வந்துள்ளோம். அதில் என்ன தவறு, அதில் என்ன குற்றம் உள்ளது. என்னிடம் எப்போதும் பாஸ் கையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். இதனால் அடுத்த முறை நான் பாஸை கையில் எடுத்துக் கொண்டு போனேன்.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எடுத்த எடுப்பிலேயே புகார் கூறி கடிதம் எழூதக் கூடாது. நேரடியாக கடிதம் எழுவதுவது என்ன பழக்கம் என்று தெரியவில்லை.
இங்கு மொழிப் பிரச்சினை வேறு உள்ளது. நாம் பேசுவதை இங்குள்ளவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் தவறாக நினைத்து விடுகிறார்கள்.
இங்கு என்னால் எந்தப் பிரச்சினையும் இல்லை. என்னை அவர்கள் குற்றம் சாட்டவும் இல்லை. ஒரு வேலை என் மீது ஊழியர்கள் யாரேனும் குற்றம் சாட்டியிருந்தால் அதுகுறித்து எனக்குத் தெரியாது. என்னிடம் வந்தால் அதுகுறித்து என்னால் விவாதிக்க முடியும் என்று கூறியுள்ளார் கோயல்.