தகுதிப்போட்டி
தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவாரா மைதானத்தில் வரும் மார்ச் 27ம் தேதி வரை இதற்கான போட்டிகள் நடைபெறவுள்ளது. முதலில் இப்போட்டி சென்னையில் நடைபெறவிருந்தது. ஆனால் தமிழக அரசு அனுமதி வழங்காததால் பின்னர் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. இந்த போட்டியானது வரும் டோக்யோ பாரா ஒலிம்பிக்ஸுகான தகுதிச்சுற்றாகவும் பார்க்கப்படுகிறது.
நடைபெற்ற அவலம்
இந்நிலையில் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேசிய விளையாட்டு போட்டி இரவு நேரத்தில் மின் விளக்குகள் வசதிக்கூட இல்லாமல் கார் மற்றும் பேட்டரி டார்ச்களின் ஒளியினால் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் ஆண்களுக்கான குண்டு எரிதல் போட்டி தொடங்க தாமதமானதால், இரவு நேரத்தில் கார் லைட்கள் மற்றும் செல்போன் டார்ச் லைட்கள் உதவியால் நடத்தப்பட்டுள்ளது. இந்த அவலம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னாள் வீரர்கள் வேதனை
மேலும் போட்டிகள் நடைபெறும் இந்த மைதானத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக பின்பற்றவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் வசதி கூட இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் ஒரு தேசிய அளவிலான போட்டியை இப்படியா நடத்துவது என முன்னாள் வீரர்கள் கொந்தளித்துள்ளனர்.
அதிரடி உத்தரவு
இந்நிலையில் இந்த அவலம் குறித்து பதிலளிக்க பாரா ஒலிம்பிக் கமிட்டிக்கு தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடைபெற்று வரும் பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் உள்ள பிரச்னைகளை உடனடியாக சரிசெய்யப்பட்டு மிகுந்த பாதுகாப்புடன் போட்டியை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.