ஹைதராபாத்: இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பை பிரிவதாக அறிவித்துள்ளார். இது விளையாட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய்னா வெளியிட்ட அறிக்கையில், "வாழ்க்கை சில சமயங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் கொண்டு செல்கிறது. நீண்ட யோசனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, நானும் காஷ்யப்பும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களுக்காகவும், ஒருவருக்கொருவர் அமைதி, வளர்ச்சி மற்றும் குணமடைதலைத் தேர்ந்தெடுக்கிறோம். இந்த நினைவுகளுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், இனி எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். இந்த நேரத்தில் எங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் புரிந்து கொண்டு மதிப்பளித்ததற்கு நன்றி" என்று உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.
சாய்னா மற்றும் காஷ்யப் இருவரும் ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் ஒன்றாகப் பயிற்சி பெற்றவர்கள். சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். காஷ்யப், போட்டி பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சாய்னாவின் பயிற்சியாளராகவும் இருந்து அவருக்கு வழிகாட்டி வந்தார். குறிப்பாக, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், பி.வி. சிந்துவை சாய்னா வீழ்த்தியபோது, காஷ்யப் தான் அவருக்குப் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய்னா நேவால், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர். மேலும், உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த ஒரே இந்திய வீராங்கனையும் இவரே. மறுபுறம், பருபள்ளி காஷ்யப், 2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று, 32 ஆண்டுகளுக்குப் பிறகு இச்சாதனையை நிகழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
சுமார் ஏழு ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் பிரிந்து செல்வதாக அறிவித்துள்ள நிலையில், காஷ்யப் தரப்பிலிருந்து இதுகுறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.