சாக்ஷிக்கு மீண்டும் “வெண்கலம்”... ராணி லட்சுமி பாய் விருது அறிவித்தார் அகிலேஷ் யாதவ்
டெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த ஹரியானா மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கிற்கு ராணி லட்சுமி பாய் விருது வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 58 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலம் வென்றார் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக். இந்த வெற்றி மூலம் இந்தியா பதக்க பட்டியலில் நுழைந்தது.
இந்தியாவிற்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்த சாக்ஷிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் உள்பட அரசியல் தலைவர்களும் அவரைப் பாராட்டியுள்ளனர்.

பரிசுகள்...
அதோடு, சாக்ஷியின் வெற்றியைக் கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஹரியானா அரசு அவருக்கு 2.5 கோடி ரூபாய் பரிசும், அரசு வேலையும் வழங்கியுள்ளது. இது தவிர மேலும் பல பரிசுகளும் அவருக்கு குவிந்து வருகின்றன.

ராணி லட்சுமி பாய் விருது...
இந்நிலையில் உத்தரப்பிரதேச அரசின் ராணி லட்சுமி பாய் விருதும் அவருக்கு தரப்பட உள்ளது. இந்த விருதானது, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் வீரர்களுக்கு உத்தர பிரதேச அரசு சார்பில் வழங்கப்படுவது ஆகும்.

வாழ்த்துக்கள்...
இது குறித்து அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷிக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய அரசு அவருக்கு ராணி லட்சுமி பாய் விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறோம்'' என்றார்.

வெண்கல விருது...
‘ராணி லட்சுமி பாய்' படம் பொறித்த வெண்கல விருதுடன் 3.11 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications