பணமும், பரிசும் குவிந்தால் "மிதப்பு"ம் கூடவே வரும்.. சாக்ஷி மாலிக்கின் கோச் பரபரப்பு பேட்டி!
சண்டிகர்: ஈஸ்வர் தாஹியா. இவர்தான் சாக்ஷி மாலிக்கின் குரு, பயிற்சியார் எல்லாமே. ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாக்ஷி மாலிக் செய்த சாதனைக்கு அஸ்திவாரம் போட்டவரே ஈஸ்வர்தான். தனது மாணவி மீண்டும் தன்னிடம் பயிற்சிக்கு வருவதற்காக ஆவலோடு காத்திருக்கிறார் ஈஸ்வர்.
ரோதக் நகரில் உள்ள ஈஸ்வர் தாஹியாவின் சோட்டு ராம் ஸ்டேடியத்தில்தான் முழுப் பயிற்சியையயும் பெற்றார் சாக்ஷி. ஈஸ்வர் தாஹியாவே நேரடியாக அவருக்குப் பயிற்சி கொடுத்து அவரை சிறந்த வீராங்கனையாக மாற்றினார். சிறு வயது முதல் இங்குதான் சாக்ஷி மாலிக் பயிற்சி பெற்றார்.
இந்த பயிற்சிக்குக் கிடைத்த பலன்தான் இன்று வெண்கலப் பதக்கத்தை சாக்ஷி வென்றுள்ளார். ஆனால் ரியோவிலிருந்து திரும்பிய பிறகு இன்னும் ஈஸ்வர் தாஹியாவைச் சந்திக்கவில்லை சாக்ஷி. அந்த அளவுக்கு பிசியாகி விட்டார். ஒரே ஒரு முறை போனில் மட்டும் பேசியுள்ளாராம் சாக்ஷி. அப்போதும் கூட அதிகம் பேசவில்லையாம். சீக்கிரமே பயிற்சிக்கு திரும்புவேன் என்று மட்டும் கூறினாராம்.

பணம் குவிவது ஆபத்து
இதுகுறித்து ஈஸ்வர் தாஹியா கூறுகையில் ஒரு வீரருக்கோ வீராங்கனைக்கோ பெரும் வெற்றி கிடைக்கும்போது பணமும், பரிசுகளும் குவிவது வழக்கம். அது அவர்களது கவனத்தை திசை திருப்பி விடும். ஒரு வகையில் அவர்களை அது பாதிக்கும். அதே தான் தற்போது சாக்ஷிக்கும் நடந்து வருகிறது.

அர்ப்பணிப்பு குறையும் அபாயம்
மேலும் இதுபோல பரிசுகளும், பணமும் குவியும்போது அர்ப்பணிப்பு உணர்வும் குறைந்து விடும். சாக்ஷி இதிலிருந்து மேலே வந்து விட வேண்டும். அதுதான் அவரது எதிர்காலத்துக்கு நல்லது. மீண்டும் பயிற்சிக்குத் திரும்புவதற்கு முன்பு அவர் பழைய சாகஷியாக மாறி விட வேண்டும்.

புதிதாக ஆரம்பிக்க வேண்டும்
பழையபடி அவர் ஜீரோவிலிருந்து தனது பயிற்சியைத் தொடங்க வேண்டும். மீண்டும் பழைய மன உறுதியுடன் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற அவரது கனவு நனவாகும். இல்லாவிட்டால் தனது வெற்றியை அவரால் தக்க வைக்க முடியாமல் போய் விடும்.

பழைய வீடியோக்களுடன் காத்திருக்கிறேன்
சாக்ஷிக்கு அவரது பழைய பயிற்சி வீடியோக்களைப் போட்டுக் காட்டப் போகிறேன். அவர் எப்படி கடுமையாக உழைத்தார், பயிற்சி பெற்றார் என்பதைக் காட்டப் போகிறேன். அப்போதுதான் அவருக்கு மனதில் பழைய உறுதி திரும்ப வரும். அதுதான் அவருக்கு கடுமையான உழைப்பின் பலனையும் உணர்த்தும் என்றார் தாஹியா.

காத்திருக்கும் தாஹியா
தனது மாணவி பிசியாக உள்ளதால் அதிருப்தி அடையவில்லை தாஹியா. மாறாக அவர் விரைவில் சகஜ நிலைக்குத் திரும்பி மீண்டும் தீவிரப் பயிற்சிக்குத் திரும்புவார் என்று காத்திருக்கிறார். சாக்ஷிக்கு மீண்டும் முன்பு போலவே தீவிரமாக பயிற்சித் தரப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications