
கடைசி வரை திக் திக்
இந்தப் போட்டியே கடைசி வரை திக் திக்காகவே இருந்தது. முதல் பீரியடில் 0-5 என்ற கணக்கில் பின் தங்கியிருந்தார் சாக்ஷி. இதனால் அவருக்கு வெற்றி கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருந்தது.

முழு வேகத்தில் ஐசுலு
மறுபக்கம் கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு நல்ல கட்டுப்பாட்டில் இருந்தார். சாக்ஷியை எழ விடாமல் திணறடித்தார். இதனால் மீண்டு வர முடியாமல் தவித்தார் சாக்ஷி.

விடாமல் போராடினார்
ஆனால் கடைசி வரை விடாமல் போராடினார் சாக்ஷி. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், கடைசி 2 விநாடிகளில் கூட போட்டி முடிவுகள் மாறியுள்ளதை நான் பார்த்துள்ளேன். எனவே எனக்கு நம்பிக்கை இருந்தது. கடைசி வரை போராடிப் பார்த்து விடுவது என்று நம்பிக்கையுடன் மோதினேன். அதற்குப் பலன் கிடைத்தது என்றார்.

2வது பீரியடில் அசத்தல்
2வது பீரியட் தொடங்கிய முதல் நிமிடத்தில் புள்ளிகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு அவருக்கு 2 நிமிடமே அவகாசம் இருந்தது சுதாரித்து வருவதற்கு. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் சாக்ஷி. புலியெனப் பாய்ந்து ஐசுலுவை அடக்கினார். சாக்ஷி திடீரென உத்வேகத்துடன் ஆடியதால் நிலை குலைந்தார் ஐசுலு. அவரால் அடுத்து சுதாரிக்க முடியவில்லை. அதற்கு சாக்ஷியும் இடம் தரவில்லை. போட்டி முடிய சில விநாடிகளே இருந்த நிலையில் சாக்ஷி இன்னும் வேகமாக செயல்பட்டு முழுமையாக ஐசுலுவை காலி செய்து விட்டார்.

8-5
0-5 என்ற புள்ளிகளுடன் பின்தங்கியிருந்த சாக்ஷி கடைசியில் 8-5 என்ற புள்ளிகளுடன் அபார வெற்றியைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார். இதன் மூலம் 11 நாள் காத்திருந்து தனது முதல் பதக்கத்தை ரியோவில் பெற்றது இந்தியா.


Click it and Unblock the Notifications











