ரியோவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்... மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார் சாக்ஷி மாலிக்!
ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். சாக்ஷியின் இந்த வெற்றி மூலம் முதல் பதக்கத்தைப் பெற்று பதக்கப் பட்டியலில் நுழைந்துள்ளது இந்தியா.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நூற்றுக்கும் அதிகமான இந்திய வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், போட்டிகள் தொடங்கி பத்து தினங்களுக்கு மேலாகியும் இதுவரை பதக்க பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை. தொடர்ந்து இந்திய வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வந்தனர்.
இதனால் சோர்வடைந்திருந்த இந்தியர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் மல்யுத்தப் போட்டியில் வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வாங்கித் தந்துள்ளார் சாக்ஷி.

காலிறுதியில் தோல்வி...
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை பிரீ ஸ்டைல் பிரிவில் காலிறுதியில் ரஷ்ய வீராங்கனை விளிரியா கொலாகோவா உடன் நடந்த போட்டியில் சாக்ஷி தோல்வியடைந்தார். இதனால் அவர் ரெபிசாஜ் சுற்றில் விளையாடினார்.

ரெபிசாஜ் சுற்று...
மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ் உடன் நடந்த இப்போட்டியில் 12-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற சாக்ஷி மாலிக், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.

வெற்றி...
அதன் தொடர்ச்சியாக கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதினார் சாக்ஷி. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் 0-5 என பின் தங்கியிருந்த சாக்ஷி கடைசி நிமிடத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு அடுத்தடுத்து புள்ளிகள் பெற்றார். முடிவில் 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற சாக்ஷி வெண்கலப் பதக்கம் வென்றார்.

முதல் பதக்கம்...
இது ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் ஆகும். அதோடு, இந்தியா சார்பில் மல்யுத்த போட்டியில் பதக்கம் பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் இந்த வெற்றி மூலம் சாக்ஷி பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications