மும்பை: இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதித்த இந்திய பெண்களை பட்டியலிட்டால் அதில் சானியா மிர்சா மற்றும் சாய்னா நேவால் முதல் ஐந்து இடங்களில் நிச்சயம் இடம் பெறுவார்கள். மகளிர் டென்னிசில் பல்வேறு சாதனை படைத்தவர் சானியா மிர்சா. அதே போல மகளிர் பேட்மிண்டனில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றவர் சாய்னா நேவால்.
சானியா மிர்சா மகளிர் டென்னிஸில் ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இருக்கிறார். மகளிர் இரட்டையர் பிரிவின் தரவரிசையில் பல முறை முதல் இடத்திலும் இருந்தார். அவர் டென்னிஸ் விளையாட்டில் குறிப்பிடத்தக்க ஆண்டுகள் உச்சத்தில் இருந்ததால் அதிக அளவில் வருமானமும் ஈட்டினார். அவரது நிகர சொத்து மதிப்பு 200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர் டென்னிஸ் விளையாட்டிலேயே பல கோடிகளை சம்பாதித்தாலும், விளம்பரங்கள் மூலம் அதிக அளவு வருமானம் ஈட்டினார். அவர் இந்தியாவில் ஹைதராபாத்திலும், வெளிநாட்டில் துபாயிலும் ஆடம்பர வீடுகளை வைத்துள்ளார். சானியா மிர்சாவுக்கு முன்பும், பின்பும் இந்தியாவில் இருந்து மகளிர் டென்னிஸில் புகழ் பெற்றவர்கள் என யாரும் இல்லை.
பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பேட்மிண்டன் தரவரிசையில் 2015 ஆம் ஆண்டு முதல் இடத்துக்கு முன்னேறி இருந்தார். இந்தியாவிலிருந்து அந்த சாதனையை செய்த ஒரே வீராங்கனை இவர் மட்டுமே. மேலும், ஒலிம்பிக்கில் பேட்மின்டனில் முதன்முறையாக பதக்கம் வென்ற பெண் என்ற சாதனையையும் செய்துள்ளார்.
பேட்மிண்டனில் பல்வேறு தொடர்களில் அவர் வெற்றிகளை பெற்றுள்ளார். இந்திய அரசின் பத்மஸ்ரீ பட்டத்தையும் பெற்றுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 36 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு அவர் ஹைதராபாத்தில் 4.6 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு ஒன்றை வாங்கினார். சாய்னா நேவாலுக்கு பல்வேறு கார்களும் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், அவரும் சில சொகுசு கார்களை விரும்பி வாங்கி உள்ளார். தற்போது அவரிடம் மினி கூப்பர், பிஎம்டபிள்யு மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் ஆகிய சொகுசு பிராண்டுகளின் கார்கள் உள்ளன.
டென்னிஸ் மற்றும் பேட்மிண்டனில் எதில் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்று பார்த்தால் நிச்சயம் டென்னிஸ் விளையாட்டில் தான் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்பதை இந்த ஒப்பீடு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. டென்னிஸ் விளையாட்டு தொழில் முறையாக மிகப்பெரிய அளவில் நடத்தப்படுகிறது. மேலும் நான்கு முக்கிய கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் டென்னிஸ் விளையாட்டை எப்போதும் லாபகரமான ஒரு விளையாட்டாக மாற்றி வைத்துள்ளது.
அதே சமயம் பேட்மிண்டனிலும் அதுபோல உலகம் முழுவதும் தொடர்கள் நடத்தப்பட்டாலும் டென்னிஸ் அளவுக்கு அவை அதிக ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதன் காரணமாக டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் கோடிக்கணக்கான வருமானத்தை பெறத் துவங்குகின்றனர். மேலும், அவர்களுக்கு அதிக ஸ்பான்சர்ஷிப்பும் கிடைக்கிறது. ஆனால், பேட்மிண்டன் விளையாட்டில் பல தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றாலும் கூட ஸ்பான்சர்ஷிப் கிடைப்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் டென்னிஸ் விளையாட்டு எளிதில் அதிக புகழ் மற்றும் பணம் சம்பாதிக்கக் கூடிய விளையாட்டாக உள்ளது.