மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் போட்ட ஒரு ஜாலி டிவீட் வைரலாகியுள்ளது. கூடவே சில விமர்சனங்களையும் சேர்த்து கொண்டுள்ளது.
கிரிக்கெட் கமெண்டரியில் ஈடுபட்டு வந்தவர் மஞ்ச்ரேகர். ஒரு வீரராக இந்திய அணியில் சிலகாலம் பங்களித்த அவர் பின்னர் அதிலிருந்து ஓய்வு பெற்றார். மும்பையைச் சேர்ந்தவரான மஞ்ச்ரேகர், டிவிட்டரில் ஏதாவது போட்டுக் கொண்டே இருப்பார். அந்த வகையில் தற்போது ஒரு போட்டோவைப் போட்டுள்ளார்.

அவர் வீட்டில் இன்டர்நெட் வைஃபை வேலை செய்யவில்லை போலும். இதனால் டெக்னீஷியனுக்கு அழைப்பு விடுத்து அவரும் வந்துள்ளார். தற்போது கொரோனா காலம் என்பதாலும், மும்பையில் அதிக அளவில் அது பரவிக் கொண்டுள்ளது என்பதாலும் கவச உடை அணிந்து அந்த டெக்னீஷியன் வந்துள்ளார். அதை போட்டோ எடுத்துப் போட்டுள்ளார் மஞ்ச்ரேகர்.

அதில், எங்கள் வீட்டு வைஃபை சரி செய்வதற்காக நாசாவிலிருந்து ஒருவர் வந்துள்ளார் என்று போட்டுள்ளார் மஞ்ச்ரேகர். இது வைரலாகியுள்ளது. பலரும் வந்து சிரித்து விட்டுப் போயுள்ளனர். அதிலும் இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ் விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.

அதேசமயம் சிலர் இப்படி கேலி செய்யக் கூடாது என்று கண்டிக்கவும் செய்துள்ளனர். கடும் சிரமத்திற்கு மத்தியில் அவர் அந்த உடை அணிந்து வந்து பணியாற்றுகிறார். அவரைப் போய் இப்படி கேலி செய்யலாமா என்ன மனநிலை உங்களுடையது என்று சிலர் கண்டித்தும் உள்ளனர்.