ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் ஆண்கள் 77 கிலோ பளுத்தூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் 4 ஆம் இடம் பிடித்து தோல்வியடைந்தார்.
கடந்த ஏப்ரலில் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.

தென்னக ரயில்வேயில் 2011 முதல் ராயபுரம் ரயில் நிலையத்தில் கணக்கராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை சிவலிங்கம். முன்னாள் படைவீரர் ஆவார். தற்போது விஐடியில் பாதுகாவலர் பணியில் உள்ளார். தாயார் தெய்வானை. சதீஷின் இளைய சகோதரர் பிரதீப்குமார்.
2007ம் ஆண்டு முதல் பளுதூக்கும் பயிற்சியை சதீஷ் மேற்கொண்டுள்ளார். சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த அவர், மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்தார். பள்ளிப் பருவத்தில் இருந்து தொடர்ந்து மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை சதீஷ் வென்றுள்ளார்.
2012ல் மலேசியாவில் நடந்த போட்டியிலும், 2013ல் கஜகஸ்தானில் நடந்த போட்டியிலும் தங்கம் வென்றார். பிறகு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஸ்னாட்ச் முறையில் 149 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் முறையில் 179 கிலோ எடையும் தூக்கி சாதனை படைத்தார்.
பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய சதீஷ் சிவலிங்கம் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பளுதூக்குதல் 77 கிலோ கிலோ எடைப்பிரிவினருக்கான குரூப்-பி இறுதிச்சுற்றில் களமிறங்கினார்.
இதில் ஸ்னாட்ச் பிரிவில் 148 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 181 கிலோவும் என மொத்தம் 329 கிலோ எடையைத் தூக்கினார் சதீஷ். இதன்மூலம், அவரால் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
கொலம்பிய வீரர் ஆண்ட்ரஸ் மயுரிசியோ 346 கிலோ எடையை தூக்கி முதலிடத்தையும், ஸ்பெயின் வீரர் ஆண்ட்ரஸ் எட்வர்டோ 343 கிலோ தூக்கி 2-வது இடத்தையும், ஜெர்மனியின் முல்லர் நிகோ 332 கிலோ எடை தூக்கி 3-வது இடத்தையும் பிடித்தனர்.