கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளுதூக்கும் 77 கிலோ எடைப் பிரிவில் தங்கத்தை தக்க வைத்துள்ளார் வேலூரைச் சேர்ந்த 25 வயதாகும் சதீஷ் சிவலிங்கம். தொடர்ந்து இரண்டாது காமன்வெல்த் தங்கம் வென்று, தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பதை நிரூபித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில், 21வது காமன்வெல்த் போட்டிகள் நடக்கின்றன. முதல் நாளில் மகளிர் பளுதூக்குதல் 48 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இரண்டாவது நாளான நேற்று மகளிர் 53 கிலோ எடைப் பிரிவில், ஞ்சிதா சானு புதிய சாதனையுடன் தங்கம் வென்று அசத்தினார். அவரைத் தொடர்ந்து, ஆடவர் 69 கிலோ எடைப் பிரிவில், 18 வயதாகும் தீபக் லேதர். வெண்கலம் வென்றார்.
இன்று நடந்த ஆடவர் பளுதூக்குதலில் 77 கிலோ எடைப் பிரிவில் வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை ஐந்து பதக்கம் கிடைத்துள்ளது. அனைத்தும் பளுதூக்குதலில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2014 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 179 கிலோ என மொத்தம், 329 கிலோ தூக்கி தங்கம் வென்றவர் சதீஷ். இதைத்தவிர காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார்.
சதீஷின் தந்தை சிவலிங்கம் முன்னாள் பளுதூக்கும் வீரர். மாநில மற்றும் தேசிய அளவில் பளுதூக்கும் போட்டிகளில் பதக்கம் வென்றவர். வேலூரில் உள்ள விஐடி பல்கலையில் செக்யூரிடியாக பணியாற்றி வந்தார். சதீஷின் சகோதரர் பிரதிப் குமாரும் பளுதூக்கும் வீரராவார்.
இன்று நடந்த போட்டியில், ஸ்னாட்ச் பிரிவில் 144 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 173 கிலோ என 317 கிலோ எடையைத் தூக்கி, தங்கத்தை தக்க வைத்தார் சதீஷ்.