சாங்வான் : கொரியாவில் நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் சௌரப் சவுத்ரி.
இவர் சென்ற வாரம் முடிந்த ஆசிய கோப்பை போட்டியிலும் தங்கம் வென்று அசத்தினார். தற்போது மீண்டும் உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்று சாதித்துள்ளார். இதில் தான் முன்பு செய்த சாதனையை தானே முறியடித்துள்ளார்.
கொரியாவில் நடந்து வரும் உலக சாம்பியன் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் மூத்த வீரர்கள் வெறிய அளவில் பதக்கங்கள் வெல்லவில்லை. எனினும், இந்தியாவின் ஜூனியர் பிரிவில் தான் அதிக பதக்கம் கிடைத்து வருகிறது.
அந்த வகையில், சௌரப் சவுத்ரி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 245.5 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்ததோடு, தன் முந்தைய உலக சாதனையை தானே முறியடித்தார். முன்னதாக ஜூன் மாதம் நடைபெற்ற போட்டியில் அவர் உலக சாதனை செய்து இருந்தார்.
இதே சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெள்ளி மட்டுமே வென்றது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இந்த போட்டிகளில் பெறும் பதக்கங்கள் உதவும். இந்த வகையில் அபூர்வி சன்டேலா மற்றும் அன்ஜும், இருவரும் வெள்ளி வென்று தங்கள் ஒலிம்பிக் இடத்தை ஓரளவு உறுதி செய்துள்ளனர். அவர்கள் எடுத்த புள்ளிகள் அடிப்படையில் அவர்களுக்கு ஒலிம்பிக் இடம் உறுதி செய்யப்படும்.
இந்த சாம்பியன்ஷிப் தொடரில் சீனியர் வீரர்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பலர் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்லாமல் திரும்பியுள்ளனர்.