டெல்லி: தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கூட்டத்தில் பங்கேற்றதற்காக தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவரும், மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் சிக்கி இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக செயல்படுவதற்கு உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளவரான சீனிவாசனுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து சீனிவாசன், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக செயல்பட உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மேலும் பிசிசிஐயின் இடைக்காலத் தலைவராக ஷிவலால் யாதவ் நியமிக்கப்பட்டு அவர் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஐசிசி சேர்மன் ஆக சீனிவாசன் நியமிக்கப்பட்டார். மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் சங்க கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்றார். இந்தப் பின்னணியில் இன்று மேட்ச் பிக்சிங் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தடை செய்யப்பட்டுள்ள சீனிவாசன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கக் கூட்டத்தில் பங்கேற்றதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் எவ்வாறு பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கூட்டத்தில் பங்கேற்கலாம் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு சீனிவாசன் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த பதில் மனுவில், சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றது தவறுதான் என்று சீனிவாசன் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரியுள்ளதாகவும், இதுபோன்ற தவறுகள் இனி நிகழாது என்றும் தெரிவித்தார்.