சென்னை: உலகக் கோப்பையை இந்தியா மீண்டும் வென்று வரவேண்டும் என்று சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் கோப்பை மாடலை வைத்துக் கொண்டு மாணவ, மாணவியர் இந்திய அணிக்கு வாழ்த்து கூறினர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதிவரை நடைபெற உள்ளன. இந்தியா முழுவதும் கிரிக்கெட் ஜூரம் பற்றிக்கொண்டுள்ளது.

கிராமங்களில் கூட மைதானங்களில் கிரிக்கெட் விளையாடி உலகக்கோப்பை போட்டியை கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ஸ்டு ஓவல் மைதானத்தில் பிப்ரவரி 15-ந் தேதியன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியைப் பற்றி இப்போதே பரபரப்பாக பேசி வருகின்றனர் கிரிக்கெட் ஆர்வலர்கள்.

இந்த நிலையில் இந்திய அணி இந்த முறையும் கோப்பையை வென்று வரவேண்டும் என்று சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் வாழ்த்து கூறியுள்ளனர். மிகப்பெரிய கோப்பையை கையில் ஏந்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள் அணிவகுத்து நின்றது பிரம்மாண்டாக காட்சியளித்தது.

1983-ல் கபில் தேவ் தலைமையிலான அணி கோப்பையை வென்று வந்தது. 1983 ஆம் ஆண்டிற்குக் பிறகு நடந்த ஒவ்வொரு போட்டியிலும் இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2011-ஆம் ஆண்டு டோணி தலைமையிலான அணி கோப்பை வென்று சாதனை படைத்தது. இம்முறையும் தோணி தலைமையிலான அணியே களமிறங்குகிறது. கோப்பையை வென்று வரவேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.