ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வட்டு எறிதல் வீராங்கனையான சீமா பூனியா தோல்வியடைந்தார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிக இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் பதக்க கனவு நாளுக்கு நாள் தகர்ந்து வருகிறது.

இந்நிலையில், வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பூனியா தோல்வி அடைந்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் சேலினாஸ் நகரில் நடைபெற்ற "கிளாசிக் 2016' தடகளப் போட்டியில் 62.62 மீ. தூரம் வட்டு எறிந்ததன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றவர் பூனியா. இந்தப் போட்டியில் 2008 ஒலிம்பிக் சாம்பியனான ஸ்டெபானி பிரெளனை பின்னுக்குத் தள்ளி பூனியா தங்கம் வென்றார்.
முன்னதாக 2004, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பூனியா, அந்த இரண்டிலும் தகுதிச்சுற்றை தாண்டவில்லை. தற்போது 3வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றிருந்தார் பூனியா.
இம்முறையும் இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் அவர் தோல்வியடைந்துள்ளார்.
பூனியா, 2014-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கமும், காமன்வெல்த் போட்டியில் வெள்ளியும் வென்றது குறிப்பிடத்தக்கது.