
பாலியல் புகார்
இவரிடம் பயிற்சி பெற்ற இளம் வீராங்கனை ஒருவர், சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நாகராஜன் மீது பாலியல் புகார் அளித்தார். அதில், கடந்த 2013ஆம் ஆண்டு நாகராஜனிடம் தடகள பயிற்சிக்காக சென்றபோது, பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து புகாரை விசாரித்த போலீஸார் விசாரணையின் முடிவில் நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

செய்திக்குறிப்பு
அப்போது போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பயிற்சியாளர் நாகராஜன் தினமும் தன்னிடம் வரும் வீராங்கனைகள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, குறிப்பிட்ட அந்த ஒரு பெண்ணை மட்டும் சிறு அறைக்குள் கட்டாயப்படுத்தி இழுத்து செல்வார் என்று கூறப்பட்டுள்ளது. அங்கு பிசியோதெரபி தருகிறேன் என்ற பெயரில் தவறான எண்ணத்தில் அப்பெண்ணிடம் நடந்துக்கொள்வார். அதற்கு அந்த பெண் ஒத்துழைக்கவில்லை என்றால் அவரின் விளையாட்டு எதிர்காலத்தை கெடுத்துவிடுவேன் என மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

சிறையில் அடைப்பு
போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட தகவல் அறிந்த நாகராஜன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைத்தொடர்ந்து அவரை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்த பின் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் புகார்கள்
இந்நிலையில் பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 7 வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை தெரிவித்துள்ள தகவலில், நாகராஜன் மீது மேலும் 7 புகார்கள் வந்துள்ளன. கடந்த 2005ம் ஆண்டு முதல் இவை நடைபெற்றுள்ளன. அனைத்து புகார்கள் மீதும் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications