ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஜித்து ராய் தோல்வியைத் தழுவினார்.
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா நிச்சயம் பதக்கம் வெல்லும் என கருதப்படும் விளையாட்டுக்களில் முதன்மையானது துப்பாக்கி சுடுதல். துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் பிஸ்டல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவுகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ஜித்து ராய் பங்கேற்கிறார்.

இந்நிலையில், ரியோ ஒலிம்பிக்கில் நேற்று நடந்த ஆண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் ஜித்து ராய், குர்பிரீத் சிங் பங்கேற்றனர். இந்திய வீரர் குர்பிரீத் சிங் 576 புள்ளிகளுடன் 20வது இடம் பிடித்து இறுதி போட்டிக்கு வாய்ப்பை இழந்தார்.
இதனிடையே இந்தியாவின் ஜித்து ராய் 580 புள்ளிகள் பெற்று 6வது இடம் பிடித்தார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதையடுத்து நடந்த இறுதிப் போட்டியில் 78.7 புள்ளிகள் மட்டும் பெற்று 8வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜித்து ராய், வரும் ஆகஸ்ட் 10ல் நடக்கவுள்ள 50 மீட்டர் 'பிஸ்டல்' பிரிவு போட்டியில் பங்கேற்கவுள்ளார். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தரலாம்.