
சீனாவின் வூஹான் பகுதியில் 5வது ஃபிபா ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. கடந்த 12ம் தேதி நடந்த போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதிய போட்டி நடந்தது. அப்போது இந்திய அணியில் இருந்த அம்ரித்பால் சிங் மற்றும் அம்ஜியோத் சிங் ஆகிய 2 சீக்கிய வீரர்கள் தலையில் டர்பனுடன் விளையாட வந்தனர்.
இதை பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்கள் இருவரையும் டர்பனை கழற்றிவிட்டு வந்தால் மட்டுமே விளையாட முடியும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் இருவரும் வேறு வழியில்லாமல் டர்பனை கழற்றி வைத்துவிட்டு வந்து விளையாடினர்.
அவர்கள் டர்பனுடன் விளையாட அனுமதிக்குமாறு இந்திய அணியின் பயிற்சியாளரான ஸ்காட் பிளெமிங் எவ்வளவோ கேட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. டர்பனை கழற்றிவிட்டு விளையாடிய அம்ரித்பால் 15 புள்ளிகள் எடுத்தார்.
அவர்கள் இருவரும் அடுத்த 6 போட்டிகளிலும் டர்பன் அணியாமல் விளையாடினர்.
இது குறித்து அவர்கள் இருவரும் கூறுகையில்,
இதற்கு முன்பு எங்களை யாரும் டர்பன் அணிந்தால் விளையாடக் கூடாது என்று கூறவில்லை. கடந்த ஆண்டு மணிலாவில் நடந்த ஆசியைக் கோப்பை போட்டியில் டர்பனுடன் தான் விளையாடினோம். ஏன் அண்மையில் கோவாவில் நடந்த லுசோபோனியா போட்டிகளிலும் டர்பனுடன் தான் விளையாடினோம். இந்த சம்பவத்தால் நாங்கள் வேதனை அடைந்துள்ளோம். ஆனால் அணிக்காக நாங்கள் டர்பனை கழற்றிவிட்டு விளையாடினோம் என்றனர்.