மம்தா பானர்ஜி
இதில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள உலகத் தலைவர்கள் என்று பார்த்தால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலியப் பிரதமர் மரியோ டிராகி, இஸ்ரேல் பிரதமர் நாப்தாலி பென்னட், ஈரானிய அதிபர் இப்ராகிம் ரைசி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆப்கன் துணை அதிபராக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் காதர் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மோடி செல்வாக்கு
பிரதமர் மோடி இந்தப் பட்டியலில் இடம் பெறுவது முதல்முறை இல்லை. ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளாகவே அவர் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். பிரதமர் மோடி குறித்து டைம்ஸ் இதழில், "இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா உயிரிழப்புகளைக் காட்டிலும் உண்மையான கொரோனா உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. இப்படி கொரோனாவை தவறாகக் கையாண்டதால் பிரதமர் மோடியின் செல்வாக்கு சற்று குறைந்தது. இருப்பினும், அது மற்ற தலைவர்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே (71%) உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.
சொல்லிவைத்து வெற்றி
அதேபோல இந்தப் பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இடம் பெற்றுள்ளார். மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியது. பிரதமர் மோடி தொடங்கி அனைத்து தலைவர்களும் மேற்கு வங்கத்தை முற்றுகையிட்டனர். இருப்பினும், அதையெல்லாம் தாண்டி திரிணாமுல் காங்கிரஸை தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா வெற்றி பெற வைத்தார்.
ஆதர் பூனாவல்லா
அதேபோல இந்தப் பட்டியலில் சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனாவல்லாவும் இடம் பெற்றுள்ளார். அவரை பற்றி டைம்ஸ் இதழில், "சர்வதேச அளவில் நிலவும் தடுப்பூசி சமத்துவமின்மை அப்பட்டமாகத் தெரிகிறது. உலகின் ஒரு பகுதியில் தடுப்பூசி பணிகள் மந்தமாக நடைபெற்றால் அது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் மிகவும் ஆபத்தான உருமாறிய கொரோனா ஏற்படும் ஆபத்தும் உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலை ஏற்படுவதைத் தடுக்க ஆதர் பூனவல்லாவால் முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கால்பந்து நோ
எனினும், இந்த பட்டியலில் விளையாட்டு உலகில்.. குறிப்பாக கால்பந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுக்களில் இருந்து ஒருவர் கூட இடம்பெறவில்லை. ஆயிரக்கணக்கான கோடிகளில் வருமானம் புரளும் கால்பந்து விளையாட்டில் மெஸ்ஸி, ரொனால்டோ என்று ஏகப்பட்ட ஆளுமைகள் இருக்கின்றனர். அதேபோல், கிரிக்கெட் விளையாட்டிலும் ஆளுமைகள் உள்ளனர். ஆனால், இந்த இரு முக்கியமான விளையாட்டுக்களில் இருந்து ஒருவர் கூட இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. கிரிக்கெட் உலகில் இன்று நம்பர்.1 ஆளுமையாக வலம் வரும் கேப்டன் கோலி கூட இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
மனநல சிக்கல்கள்
அதேசமயம், டென்னிஸ் உட்பட மற்ற சில விளையாட்டுகளை சேர்ந்த ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர். இதில், ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் மனநல பிரச்சனை காரணமாக, டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியிருந்த ஒசாகா சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அதேபோல், அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இவரும் சில மனநல சிக்கல்கள் காரணமாக திடீரென சில நாட்கள் போட்டிகளில் இருந்து விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுனிசா லீ
இவர்களைத் தவிர, அமெரிக்க கால்பந்தின் சூப்பர் ஸ்டார் டாம் பிராடி, அமெரிக்காவின் மற்றொரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சுனிசா லீ, லாஸ் ஏஞ்சல்ஸ் அணியின் பேஸ்பால் வீரர் ஷோஹேய் ஒஹ்டனி ஆகிய விளையாட்டு சார்ந்த வீரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், கோலியோ, தோனியோ, மெஸ்ஸியோ, ரொனால்டோவோ, ஜோகோவிச்சோ, நடாலோ இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.