இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்தது அரசு
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத்தை திடீரென கூண்டோடு கலைத்து விட்டனர்.
உருப்படியில்லாத ஒரு கிரிக்கெட் வாரியம் இலங்கை கிரிக்கெட் வாரியம். நிர்வாகத் திறமையின்மை, ஊழல், அரசியல் குறுக்கீடுகள் என குண்டக்க மண்டக்க செயல்பட்டு வரும் அமைப்புதான் இலங்கை கிரிக்கெட் வாரியம். இலங்கை அரசியல்வாதிகளின், குறிப்பாக ராஜபக்சே குடும்பத்தினரின் ஆதிக்கம் இங்கு அதிகம்.
சமீபத்தில் ஹாங்காங்கில் நடந்த ஐசிசி வருடாந்திர மாநாட்டில் தேசிய கிரிக்கெட் வாரியங்களில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு அரசு கலைத்து விட்டது. விரைவில் புதிய கமிட்டி அமைக்கப்படும் என்று இலங்கை விளையாட்டுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹர்ஷா அபயக்கூன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்கு தற்போது கிரிக்கெட் வாரியம் போய்விட்டதால் ஐசிசியால், இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்யப்படும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கடந்த 7 ஆண்டுகளாக அரசியல்வாதிகளுக்கு ஆதரவானவர்களை உடைய இடைக்கால கமிட்டிதான் நிர்வகித்து வருகிறது.
2012-க்குள் சுதந்திரமான தேர்தல்களை கட்டாயம் நடத்த வேண்டும் என்பதற்காக விதிமுறைகளை திருத்துவதற்கு இந்த வாரம் நடைபெற்ற ஐசிசியின் ஆண்டுக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தேசிய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் பந்துவீச்சாளர் சோமச்சந்திர டி சில்வா தலைமையிலான நிர்வாகம் தற்போது பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது ஒரு பெரும் கடனாளி அமைப்பாகும். கிட்டத்தட்ட 15 மில்லியன் டாலருக்கு மேல் அது கடன் வைத்துள்ளது. இந்தக் கடனை அடைக்க அது இந்திய கிரிக்கெட் வாரியத்தைத்தான் நம்பியுள்ளது. எல்லாம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளை நடத்தியதால் வந்த வினை. உலக அளவில் தனது நாடு பாதுகாப்பாகவும் பந்தாவாகவும், இருப்பதாக காட்டிக் கொள்ள பெரும் பணத்தை வாரியிறைக்க வைத்து புதிய ஸ்டேடியங்கள் கட்டவும், பழைய ஸ்டேடியங்களை பிரமாண்டமாக புதுப்பிக்கவும் கட்டாயப்படுத்தினார் ராஜபக்சே. விளைவு, இப்போது தலைக்கு மேல் போய் விட்டது கிரிக்கெட் வாரியத்தின் கடன்.
ஹம்பந்தோட்டா அருகே புதிய கிரிக்கெட் ஸ்டேடியத்தைக் கட்டி அதற்கு ராஜபக்சே பெயரைத்தான் வைத்துள்ளனர். இதுதான் பெரும் கடன் சுமையை ஏற்றி விட்டதாம்.
இந்தக் கடனை சமாளிக்க மானியம் தருமாறு அரசிடம் கேட்டபோது அரசு அதைக் கண்டு கொள்ளவே இல்லை. காரியம் முடிந்ததும் கையைக் கழுவி விட்டது இலங்கை அரசு. இப்போது வாரியத்தையும் கலைத்து விட்டது.


Click it and Unblock the Notifications