சோனு சூட் செய்த உதவி
சோனு சூட் அப்படி என்ன சாதனை செய்து விட்டார் என்று கேட்கலாம். மும்பையில் தவித்துக் கொண்டிருந்த பிற மாநிலத் தொழிலாளர்கள் 350 பேரை, பஸ்கள் பிடித்து பத்திரமாக அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் சோனு சூட். இதுதான் பலரையும் மகிழ்வித்துள்ளது. கிட்டத்தட்ட 10 பஸ்களைப் பிடித்து அவர்களை அனுப்பி வைத்துள்ளார் சோனு சூட். எத்தனை பேர் இப்படிச் செய்வார்கள் இந்தக் காலத்தில்.
பத்து பஸ்கள் ஏற்பாடு
இந்த செயலுக்காக அவர் பல்வேறு மாநில அரசுகள், அரசுத் துறைகளிடமிருந்து அனுமதி பெற வேண்டியிருந்தது. அதையெல்லாம் செய்து முடித்த சோனு சூட் 10 பஸ்களை வாடகைக்குப் பிடித்தார். அதன் பின்னர் அதில் இந்த 350 பிற மாநிலத் தொழிலாளர்களையும் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தார். பஸ்களில் ஏறிச் சென்ற அனைவருமே சோனு சூட்டுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினர்.
பிற மாநில தொழிலாளர்கள்
சோனு சூட்டின் இந்த செயலில் மது நிறுவன ஆலை அதிபர் நீத்தி கோயலும் துணை நின்றுள்ளார். மகாராஷ்டிரா, கர்நாடகா மாநில அரசுகளின் அனுமதியை இவர்கள் பெற்று தொழிலாளர்களை அனுப்பியுள்ளனர். மகாராஷ்டிராவின் தானே நகரிலிருந்து இந்த பஸ்கள் கர்நாடகத்தின் குல்பர்காவுக்கு கிளம்பிப் போயுள்ளன.
சானியா மிர்ஸா பாராட்டு
சானியா மிர்ஸா இந்த செயலைப் பாராட்டி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில் எனது நண்பன் சோனு சூட் செய்துள்ள இந்த பணிக்காக அவரை நான் பாராட்டுகிறேன். பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் சானியா மிர்ஸா. இது மனித குலத்துக்கு செய்த மிகப் பெரிய சேவை என்றும் நெக்குருகியுள்ளார் சானியா மிர்ஸா.
சாய்னா நேவால் பாராட்டு
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் சோனு சூட்டின் இந்த உதவியைப் பாராட்டி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், மிகப் பெரிய சேவை இது. பரிதவித்த பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் மிகப் பெரிய உதவியை செய்துள்ளார் சோனு சூட். அவருக்கு நான் சல்யூட் வைக்கிறேன் என்று கூறியுள்ளார் சாய்னா.
அனைவருக்கும் உரிமை உண்டு
இதுகுறித்து சோனு சூட் கூறுகையில், ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அவரது குடும்பத்தினருடன் இருக்க உரிமை உள்ளது. யாரும் பிரிந்திருக்கக் கூடாது. இதுபோன்ற நெருக்கடியான சமயத்தில் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும். அதைத்தான் நான் உறுதி செய்தேன். இதற்காக எனக்கு உதவிய அரசுகளுக்கு மிகப் பெரிய நன்றி என்று கூறியுள்ளார் சோனு சூட்.
மேலும் பல உதவிகள்
நடிகர் சோனு இது மட்டும் செய்யவில்லை. ஏற்கனவே பஞ்சாபில் உள்ள டாக்டர்களுக்காக 1500 கவச உடைகளை அவர் வாங்கிக் கொடுத்துள்ளார். அதேபோல மும்பையில் உள்ள தனது ஹோட்டலை மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் தானமாக கொடுத்துள்ளார். மிகப் பெரிய மனதுதான் இந்த நடிகருக்கு.. நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.