அம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் விடுதியிலிருந்து கீழே விழுந்த ஸ்பெயின் அணி ரக்பி வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் பிறந்தவர் காவா லியூமா, ரக்பி வீரரான இவர், ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்து அந்த நாட்டின் தேசிய அணியில் இடம்பிடித்தார்.
இந்த நிலையில், உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிக்காக ஸ்பெயின் அணி நெதர்லாந்துடன் மோதியது.

அம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி 52க்கு7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் வீரர்கள் தங்களது விடுதிக்கு சென்றனர். அப்போது தனது அறையிலிருந்து காவா லியூமா, எதிர்பாராத விதமாக 8 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் காவாவின் தலையில் பயங்கர காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவாவின் மறைவு ரக்பி விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவு செய்தியை உறுதிப்படுத்தியுள்ள ஸ்பெயின் ரக்பி சம்மேளனம், மறைவு செய்தியை , அவரது மனைவிக்கு தெரியப்படுத்திவிட்டதாக கூறியது
32 வயதான காவாவின் உயிரிழப்பு குறித்து நெதர்லாந்துபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது விபத்தா, இல்லை எவரேனும் தள்ளிவிட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. இல்லை மது போதையில் இது நடந்து இருக்கலாமா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள ரக்பி ரசிகர்கள் காவாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.