வீரர்களின் மறுபிரவேசம்
கடந்த ஆண்டுகளில் காயம், சொந்தபிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் தாங்கள் சார்ந்த விளையாட்டுகளில் இருந்து விலகி, இந்த ஆண்டில் மீண்டும் விளையாட்டிற்கு திரும்பி, தாங்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை விளையாட்டு வீரர்கள் நிரூபித்து வருகின்றனர்.
2017ல் 4வது அறுவை சிகிச்சை
முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் சில சொந்த பிரச்சினைகள் காரணமாக கடந்த ஆண்டுகளில் தன்னுடைய கோல்ப் போட்டிகளில் கவனம் செலுத்தாத டைகர் வுட்ஸ் ஓய்வெடுத்து வந்தார். கடந்த 2017ல் இவருக்கு 4வது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஆண்டின் இறுதியில் சர்வதேச அளவில் அவரது ரேங்கிங் 1,199ஆக குறைந்தது. அவர் மீண்டும் கோல்ப் விளையாட முடியாது என்றே அனைவரும் கருதினர்.
மீண்டும் விளையாடி அசத்தல்
இந்நிலையில் தன்னுடைய பிரச்சினைகள் மற்றும் காயங்களில் இருந்து மீண்டு வந்து விளையாடிய டைகர் வுட்ஸ், கடந்த ஆண்டில் பிரிட்டீஷ் ஓபன் மற்றும் பிஜிஏ சாம்பியன்ஷிப்பில் விளையாடி அசத்தினார். பிஜிஏ தொடரில் தன்னுடைய 82வது சாம்பியன் பட்டத்தை வென்றதன்மூலம் 1965ல் அமெரிக்காவின் சாம் ஸ்னீட் படைத்த சாதனையை வுட்ஸ் சமன் செய்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் அகஸ்டா மாஸ்டர்ஸ் போட்டியில் அவர் வென்றது அவரது மகுடத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தது. தொடர்ந்து அமெரிக்க ஓபன் போட்டியிலும் பிரசிடெண்ட் கோப்பையிலும் வென்று தன்னுடைய மறுபிரவேசத்தை வலிமைப்படுத்தினார் வுட்ஸ்.
வலிமையை நிரூபித்த டென்னிஸ் வீரர்
கடந்த 2017ல் இடுப்பில் ஏற்பட்ட வலி காரணமாக தொடர்ந்து ஆட முடியாத நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஆன்டி முர்ரேவிற்கு ஏற்பட்டது. ஆயினும் இடுப்பில் செய்யப்பட்ட இரண்டாவது அறுவை சிகிச்சை, மனஉறுதி, எதிர்ப்பாற்றல் போன்ற காரணங்களால் அவர் கூடிய விரைவிலேயே ஓய்விலிருந்து மீண்டு வந்து தன்னுடைய வலிமையை வெளிப்படுத்தினார்.
மீண்டும் நிரூபணம்
தனிநபர் பிரிவில் ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப்பதக்கங்கள் மற்றும் 3 கிராண்ட்ஸ்லாம் போன்ற பட்டங்களை வென்றுள்ள ஆன்டி முர்ரே, ஓய்விலிருந்து மீண்டு கடந்த ஜூன் மாதத்தில் குயின்ஸ் கிளப் போட்டியில் இரட்டையர் பிரிவில் பங்கேற்றார். அதுமுதல் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஆடி வருகிறார். கடந்த அக்டோபரில் நடைபெற்ற ஐரோப்பிய ஓபன் இறுதிப் போட்டியில் ஸ்டான் வாவ்ரிங்காவை அதகளம் செய்த ஆன்டி முர்ரே, அந்த போட்டியில் வென்றதன்மூலம் தன்னுடைய திறன் சற்றும் குறைவுபடவில்லை என்பதை நிரூபித்துள்ளார்.
தடையிலிருந்து மீண்டு வந்த வீரர்கள்
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் 12 மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடை விதித்திருந்தது. இவர்கள் விவகாரத்திலும் இவர்கள் மீண்டு வருவார்களா என்ற ஐயம் பல்வேறு தரப்பிலும் இருந்த நிலையில், தங்கள் தடையிலிருந்து மீண்டு தற்போது அணியில் இடம்பெற்று கலக்கி வருகின்றனர்.
உலக அளவில் கவனம்
கடந்த உலக கோப்பையில் 647 ரன்களை குவித்து சராசரியாக 71.88ஐ பெற்று வார்னர் தனிக்கவனம் பெற்ற நிலையில், ஆஷஸ் தொடரில் 774 ரன்களை குவித்து 110.57 சராசரியை பெற்று ஸ்மித், உலக அளவில் தன்னை மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக மீண்டும் அடையாளப்படுத்தினார். இந்த தொடரில் வார்னரின் ஆட்டமும் பயங்கரமாக இருந்தது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் அடித்த முச்சதமும் இவரது மறுபிரவேசத்தை மிகவும் வலிமையாக்கியது.
கேன்சருக்கு நன்றி தெரிவித்த வீரர்
நீச்சல் போட்டியில் சிறப்பான வீரராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு வீரர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மீண்டும் தன்னுடைய விளையாட்டை தொடர முடியுமா... முடியும் என்பதை தன்னுடைய செயலால் நிரூபித்துள்ளார் நாதன் ஆட்ரியன். பல அறுவை சிகிச்சைகளுக்கு ஆளான ஆட்ரியன், இவ்வளவு சிறிய வயதில் தனக்கு கேன்சர் வந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதிலிருந்து தான் தற்போது மீண்டுள்ள நிலையில், இன்னும் அதிக ஆண்டுகள் நீச்சல் போட்டிகளில் கோலோச்ச முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்று ஆட்ரியன் அசத்தல்
ஒலிம்பிக்கில் இதுவரை 5 தங்க பதக்கங்களை வென்றுள்ள ஆட்ரியன், கடந்த மே மாதத்தில் தான் கேன்சரிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்தார். தொடர்ந்து ஜூலை மாதத்தில் தென் கொரியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் 400 மீட்டர் போட்டியில் பங்கேற்று அவர் வெற்றி பெற்றார்.
மருத்துவர்களின் கூற்றை பொய்யாக்கியவர்
கடந்த 2016ல் தனக்கு ஏற்பட்ட லுகேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோயில் இருந்து போராடி மீண்டு வந்து தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார் ரக்பி போட்டியின் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ்டியன் லீலிஃபானோ. தன்னுடைய சகோதரியின் உதவியுடன் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையும் செய்துக் கொண்டார் லீலிஃபானோ. அவர் மீண்டும் ரக்பி விளையாட்டை தொடர முடியாது என்ற மருத்துவர்களின் கூற்றையும் பொய்யாக்கினார். இந்த சிகிச்சையினால் 12 கிலோ அளவிற்கு எடை குறைந்த போதிலும், தன்னுடைய மறுபிரவேசத்தை மிகச் சிறப்பானதாக்கினார் லீலிஃபானோ.
வலிமையானவராக நிரூபணம்
அவருடைய திறனை சோதித்தறிந்த ஆஸ்திரேலிய நிர்வாகம், ஜப்பானில் இந்த ஆண்டு நடைபெற்ற ரக்பி உலகக்கோப்பையில் அவரை பங்கேற்க செய்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி கொள்ள முடியவில்லை என்றாலும், தன்னுடைய இந்த மறுபிரவேசத்தின் மூலம் தன்னை உலக அளவில் லீலிபாஃனோ நிரூபித்துக் கொண்டார்.
போட்டிகளில் பங்கேற்காத நிலை
கடந்த ஆண்டில் வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் போட்டியில் இருந்து விலகிய ரபேல் நடால், தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நோவாக் ஜோகோவிச்சிடம் தோல்வி கண்டார். ஆயினும் மீண்டும் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.
நம்பர் ஒன் இடத்தை பிடித்த ரபேல்
இதையடுத்து காயத்திலிருந்து மீண்டு வந்த நடால், பாரீசில் நடைபெற்ற 12வது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று சாதனை புரிந்தார். அமெரிக்க ஓபன் போட்டியில் 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றார். இதன்மூலம் ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்ய மேலும் ஒரு புள்ளி மட்டுமே அவருக்கு உள்ளது. இதனிடையே, இந்த ஆண்டின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்துள்ள 33 வயதான ரபேல் நடால், சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிருபித்துள்ளார்.