
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் ஊக்க மருந்து பயன்படுத்திய வீரர்கள், வீராங்கனைகள், போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என்று உலக ஊக்க மருத்து தடுப்பு அமைப்பின் தலைவர் ஜான் பெகே வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து இந்த ஆண்டு துவக்கம் முதல் கடந்த மாதம்(ஜூன்) வரை பல வீரர்கள், வீராங்கனைகள் ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த பரிசோதனையின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் ஊக்க மருந்து பயன்படுத்திய 107 பேருக்கு, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ள 5 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 300 பேர் ஊக்க மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை என்று தெரியவந்தது. மீதமுள்ளவர்களின் சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.
இது குறித்து உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் தலைவர் ஜான் பெகே கூறியதாவது,
ஊக்க மருந்து பயன்படுத்திவிட்டு ஒலிம்பிக் போட்டியி்ல் பங்கேற்க நினைத்த வீரர்கள், வீராங்கனைகள் தற்போது சிக்கியுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்திவிட்டு யாரும் பங்கேற்க முடியாது. ஊக்க மருந்து பயன்படுத்தி ஒலிம்பிக் வாய்ப்பை இழந்ததை, தடை விதிக்கப்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் உணர வேண்டும் என்றார்.