
இதனால் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் இரட்டையர் போட்டிக்கு 2 அணிகள் பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மகேஷ் பூபதியும், ரோஹன் போபண்ணாவும் ஒரு அணியாக போவார்கள். லியாண்டர் பயஸும், யூகி பம்ப்ரியும் இணைந்து இன்னொரு அணியாக செல்வார்கள்.
மகேஷ் பூபதிக்கு லியாண்டர் மீது ஏன் இத்தனை காண்டு என்று புரியவில்லை. ஏற்கனவே லியாண்டருடன், இணைந்து விளையாடுவதிலிருந்து சானியா மிர்ஸாவை தடுத்தவர் என்ற பெயர் அவருக்கு உண்டு. இப்போது போபண்ணாவை கூட்டுச் சேர்த்துக் கொண்டு லியாண்டருக்கு அவமரியாதை ஏற்படும் வகையில் அவர் செயல்பட்டுள்ளதாக டென்னிஸ் பிரியர்கள் அதிருப்தியுடன் கூறுகிறார்கள்.
ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் இரட்டையர் பிரிவில் பூபதியும், பயஸும் பங்கேற்பார்கள் என்று டென்னிஸ் சங்கம் அறிவித்தது. ஆனால் இதை பூபதி ஏற்கவில்லை. நான் பயஸுடன் விளையாட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து பரவாயில்லை, நான் போபண்ணாவுடன் சேர்ந்து விளையாடத் தயார் என்று பயஸ் இறங்கி வந்தார். ஆனால் போபண்ணாவோ, நான் விளையாட முடியாது என்று அவரும் பூபதிக்கு ஆதரவாக திரும்பினார்.
இதனால் டென்னிஸ் சங்கம் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தது. இந்தியாவின் நம்பர் ஒன் வீரருக்கு எதிராக இரண்டு வீரர்கள் சேர்ந்து கொண்டு அவமதிப்பது போல நடப்பதை ஏற்க முடியாது. லியாண்டரை, ஜூனியர் வீரர் ஒருவருடன் இணைந்து விளையாடுங்கள் என்று சொல்வது, லியாண்டரை அவமதிக்கும் செயல். சர்வதேச அளவில் பல சாதனைகளுடன், கெளரவத்துடன் வலம் வரும் வீரர் அவர் என்று டென்னிஸ் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
மறுபக்கம் பூபதியை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடந்தன. ஆனால் பூபதி விடாப்படியாக மறுத்து விட்டார். இதையடுத்து தற்போது இரண்டு அணிகளை ஒலிம்பிக்குக்கு அனுப்ப முடிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகனும், இந்த விஷயத்தில் பூபதிக்கு ஆதரவாகவே செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்தான் இரண்டு அணிகளை அனுப்பும் ஐடியாவை சொல்லியவர்.