
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேல் வீரரை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தை 5வது முறையாக வென்றுள்ளார்.
இந்த நிலையில் அகில இந்திய செஸ் வாரியத்தின்(ஏ.ஐ.சி.எப்) வருடாந்திர பொதுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்தியாவில் வளர்ந்து வரும் செஸ் வீரர்களுக்கான பரிசுத் தொகையை அதிகரித்து, இந்தியாவை செஸ் சாம்பியன்களை கொண்ட நாடாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அகில இந்திய செஸ் வாரியத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
ஆண்களுக்கான மில்லியன் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியை நடத்த ஏ.ஐ.சி.எப். ரூ.6 லட்சமும், போட்டி ஏற்பாட்டாளர்கள் ரூ.4 லட்சமும் வழங்க வேண்டும். பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த ஏ.ஐ.சி.எப். ரூ.3.5 லட்சமும், போட்டி ஏற்பாட்டாளர்கள் ரூ.2.5 லட்சமும் சேர்த்து ரூ.6 லட்சம் பரிசுத் தொகை வழங்க வேண்டும்.
அடுத்த ஆண்டில் இருந்து தேசிய பிரிமியர் சாம்பியன்ஷிப் தொடர் புது பொழிவுடன் நடத்தப்படும். வழக்கமாக 45 பேர் கலந்து கொள்ளும் தேசிய பிரிமியர் சாம்பியன்ஷிப் தொடரில் அடுத்த ஆண்டில் இருந்து சிறந்த 14 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
அதிலும் தேசியளவில் செஸ் தரவரிசையில் முதல் 4 இடங்களை பிடித்த வீரர்கள் மற்றும் கடந்த ஆண்டு வெற்றியாளர் மட்டுமே, போட்டியில் நேரடியாக நுழைய முடியும். மற்ற 9 போட்டியாளர்களும் தேசிய வீரர்களில் இருந்து தேர்வு செய்யப்படுவர்.
மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ரூ.20 லட்சம் பரிசுத் தொகை கொண்ட போட்டிகளை நடத்த ஏ.ஐ.சி.எப் முடிவு செய்துள்ளது. இதில் ஆண்களுக்கான பரிசுத் தொகை ரூ.12 லட்சமும், பெண்களுக்கான பரிசுத் தொகை ரூ.8 லட்சமும் இருக்கும்.
மேலும் தேசிய அளவில் 7, 9, 11, 13 மற்றும் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான செஸ் போட்டிகளை நடத்த ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும்.
இந்தியாவில் முதல் முறையாக இந்த ஆண்டு 8 சர்வதேச செஸ் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த்திற்கு, பாரத் ரத்னா விருது அளிக்க பரிசீலிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.