சிட்னி: இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் மைதானங்கள் உள்ள முக்கிய நகரங்களான பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளதால், இந்தியாவுக்கு வர அச்சம் தெரிவித்துள்ளனர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்.
இதே போல பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாகக் கூறியும் சமாதானமாகாத ஆஸி. வீரர்கள், முடிந்த வரை இந்த சுற்றுப் பயணத்தை தள்ளிப் போடுமாறு தங்கள் வாரியத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வீரர்களின் பயத்தைப் போக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் இந்தியா வந்து பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அக்டோபர் மாதம் இந்தியா வந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதே போல பாகிஸ்தானில் விரைவில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிகளிலும் விளையாடுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய நகரங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து வெடி குண்டு தாக்குதல்களை நடத்தி வருவது, ஆஸி வீரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தினர் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்தனர். விரைவில் தங்கள் அறிக்கையை அளிக்க உள்ளனர்.
தற்போது இந்தியாவிலும் இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப் போவதாகவும், பாதுகாப்பு குறித்து ஆஸி. கிரிக்கெட் வாரியம் திருப்தியடைந்தால் மட்டுமே வீர்ர்கள் விளையாடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.