ஜாம்ஷெட்பூர்: இந்திய வில்வித்தை வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் ஜொலிக்க முடியாமல் போனதற்கு ஸ்டேடியங்களில் காணப்பட்ட ரசிகர் கூட்டமும், அவர்கள் எழுப்பிய பெரும் சத்தமுமே காரணம் என இந்திய வில்வித்தைப் பயிற்சியாளர் சஞ்சீவ சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தைப் போட்டிகள் நடந்த ஸ்டேடியத்தில் பெரும் கூட்டம் கூடியது. அவர்கள் எழுப்பிய பெரும் சத்தமே, நமது வீரர்கள் சரிவர கவனம் செலுத்தி வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம்.
தங்களது இலக்கில் நமது வீரர், வீராங்கனைகளால் கவனம் செலுத்த முடியவில்லை. இதுவே நமது தோல்விக்கு முக்கிய காரணம் என்றார்.
சஞ்சீவ சங்கின் கருத்தை பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளரான பூர்ணிமா மஹதோவும் ஆமோதித்தார். நமது வீரர், வீராங்கனைகள் மிகப் பெரிய கூட்டத்திற்கு முன்பும் விளையாடக் கூடிய அளவுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.