மெல்போர்ன்: டெல்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி இந்தியா செல்வதற்கு உகந்த சூழல் நிலவுகிறதா என்பது குறித்து ெதரிவிக்குமாறு தனது பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக அடுத்த வாரம் இந்தியா வரத் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கவலை அளித்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய பொது விவகாரத்துறை மேலாளர் பீட்டர் யங் கூறுகையில், இந்தியாவில் பாதுகாப்பு நிலைமை குறித்து விரிவாக ஆராயவுள்ளோம். அதன் பிறகே டெஸ்ட் தொடரில் பங்கேற்க வீரர்களை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும். ஆஸ்திரேலிய அரசு மற்றும் எங்களது பாதுகாப்புத்துறை ஆலோசனைக் குழுவின் ஆலோசனையைப் பெறவுள்ளோம். இந்தியாவில் நிலவும் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு மேலாளர் ரெக் டிக்சன் உடனடியாக அறிக்கை தருமாறு கோரியுள்ளோம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் மற்றும் கிரிக்கெட் வாரிய பொது மேலாளர் மைக்கேல் பிரவுன் ஆகியோருடன் டிக்கன்சன் இணைந்து செயல்படுவார். இந்திய கிரிக்கெட் வாரியம், டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் ஆகியவற்றுடனும் அவர்தொடர்பு கொண்டு விவரம் கேட்பார். இவற்றின் அடிப்படையில்,இந்தியாவுக்கு வீரர்களை அனுப்புவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் முடிவை அறிவிப்போம். வீரர்கள் மற்றும் அணி உறுப்பினர்களின் பாதுகாப்புதான் முக்கியமானது. அதன் பின்னர் தான் விளையாட்டு என்றார் யங். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அரசு தனது நாட்டினருக்கு ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா செல்லும் ஆஸ்திரேலிய நாட்டவர்கள், அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்குமாறு அது கேட்டுக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி செப்டம்பர் 21ம் தேதி இந்தியா வர வேண்டும். முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் அக்டோபர் 9ம் தேதி தொடங்குகிறது. 3வது டெஸ்ட் போட்டி டெல்லியில், அக்டோபர் 29ம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டபடி இந்தியா வருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.