நாக்பூர்: இந்தியா ரெட் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ப்ளூ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.இந்தியா ப்ளூ, இந்தியா ரெட் மற்றும் இந்தியா கிரீன் அணிகள் மோதும் சாலஞ்சர் சீரிஸ் கிரிக்கெட் தொடர் நேற்று நாக்பூரில் துவங்கியது. முதல் போட்டியில் டோணியின் ப்ளூ அணியும், பத்ரிநாத்தின் ரெட் அணியும் மோதின.டாஸ் வென்ற இந்தியா ரெட் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு துவக்க வீரர்களாக வந்த முரளி விஜய், ஷிகார் தவான் ஜோடி அதிரடியாக விளையாடியது. விஜய் 44, தவான் 39 ரன்களுக்கு அவுட்டானார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.2 ஓவரில் 79 ரன்கள் எடுத்தது.அடுத்து வந்த ஹர்ஷத் கடிவாலே 55, இஷாங் ஜாகி 54 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேற இந்தியா ரெட் 44.3 ஓவரில் 248 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.அடுத்து பேட் செய்த இந்தியா ப்ளூ அணிக்கு நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணி 10.4 ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 49 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் கேப்டன் டோணி வித்தியாசமான முடிவை எடுத்தார்.ஐந்தாவது வீரராக ஹர்பஜன் சிங்கை களமிறக்கினார். டோணியின் நம்பிக்கையை காப்பாற்றிய ஹர்பஜன் பொறுப்புடன் பேட் செய்த சுரேஷ் குமாருக்கு பூரண ஒத்துழைப்பு கொடுத்தார். ஹர்பஜன் 33 ரன்கள் எடுத்தார். அடுத்து கேப்டன் டோணி வந்தார். அவர் சுரேஷ் குமாருடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்தார். சுரேஷ் குமார் 87 ரன்கள் எடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.இந்நிலையில் கடைசி ஓவரில் கைவசம் 1 விக்கெட் மட்டும் இருக்கும் நிலையில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலை உருவானது. முனாப் படேல் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் டின்டா 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்திலும் 2 ரன்கள் கிடைத்தது. இதையடுத்து 4 பந்தில் 3 ரன்கள் என போட்டி பரபரப்பானது. மூன்றாவது பந்தை டின்டா பவுண்டரிக்கு விரட்ட, இந்தியா ப்ளூ 49.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.