
சென்னை சேப்பாக்கம் மைதானம் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்டது. அப்போது ஐ.ஜே.கே ஆகிய 3 கேலரிகள் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டன எனக் கூறி சென்னை மாநகராட்சி அவற்றை பயன்படுத்த தடைவிதித்தது. இந்தத் தடையை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து 3 கேலரிகளையும் பயன்படுத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது சென்னை மாநகராட்சி. இம்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சர்ச்சைகுரிய 3 கேலரிகளையும் பயன்படுத்த மே 10-ந் தேதி இடைக்கால தடை விதித்டது. இதனால் மே 12-ந் தேதி 3 கேலரிகளுக்கும் சென்னை மாநகராட்சி அதிரடியாக சீல் வைத்தது. ஆனால் ஐபிஎல் போட்டிகள் நடடபெறுவதால் 3 கேலரிகளை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி தமிழ்நாடு கிரிக்கெட் ச்ங்கம் உச்ச்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 14-ந்தேதி போட்டிக்கு மட்டும் 3 கேலரிகளையும் பயன்படுத்த அனுமதித்தது. மேலும் இந்த 3 கேலரிகளையும் நீதிமன்ற அனுமதி இல்லாமல் வேறு எந்தப் போட்டிக்கும் பயன்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உச்சநீதிமன்றத்தில் உத்தரவாதமும் அளித்தது. இந்நிலையில் 3 கேலரிகளையும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மீண்டும் சீல் வைத்தனர்