
சமீபத்தில் ஐசிசியின் வீரர்கள் பிரதிநிதியாக இந்தியா சார்பில் எல்.சிவராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐசிசியின் எத்திக்ஸ் கமிட்டிக்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
டிம் மே-வுக்குப் பதில்தான் சிவராமகிருஷ்ணன் இப்பொறுப்புக்கு வந்தார். ஆனால் கேப்டன்களை கட்டாயப்படுத்தி டிம் மேவுக்கு எதிராக வாக்களித்து பின்னர் சிவராமகிருஷ்ணனை இப்பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக புதிய உறுப்பினரைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பின்போது டிம் மேவுக்கு 9 வாக்குகளும், அவருக்கு எதிராக ஒரு வாக்கும் கிடைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்ப்பந்தம் காரணமாக மறு வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாம். அதில் சிவராமகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டதாக சர்வதேச வீரர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது.
மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது பண பலத்தால், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஜிம்பாப்வே நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களை மடக்கி விட்டதாகவும், அந்த நாடுகளின் கேப்டன்களை பணத்தால் அடித்து காரியம் சாதித்து விட்டதாகவும் வீரர்கள் சம்மேளனம் குற்றம் சாட்டுகிறது.
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சம்மேளனத்தின் சட்ட ஆலோசகர் இயான் ஸ்மித் கூறுகையில், கிரிக்கெட் வாரியங்களை கட்டாயப்படுத்தி, பண பலத்தைப் பயன்படுத்தி, ஐசிசியின் கடும் எச்சரிக்கையையும் மீறி இந்த குளறுபடியைச் செய்துள்ளனர். வாரியங்களின் மூலம் அந்தந்த நாடுகளின் கேப்டன்களை தங்களுக்கு சாதகமாக மடக்கியுள்ளனர். இது மோசமானதாகும் என்றார்.