சென்னை: 2024 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இரண்டு முக்கிய விளையாட்டு தொடர்கள் நடத்தப்பட்டன. அதில் முக்கியமானது முதலமைச்சர் கோப்பை விளையாட்டு தொடர் ஆகும். சுமார் 29 விளையாட்டுக்கள் இடம் பெற்ற அந்த தொடர் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
சுமார் 29 விளையாட்டுகளில், 38 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மொத்தமாக 37 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில் 29 விளையாட்டுக்களில் பல்வேறு பிரிவுகளாக விளையாட்டுத் தொடர்கள் நடத்தப்பட்டன.

அதன் முடிவில் மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாவட்டமும் பெற்ற பதக்கங்கள் பட்டியலிடப்பட்டன. அதில் சென்னை மாவட்டம் அபாரமாக செயல்பட்டு ஒட்டுமொத்தமாக 254 பதக்கங்களை அள்ளியது. 15 தங்கம், 80 வெள்ளி மற்றும் 69 வெண்கலங்களை சென்னையை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் வென்றனர்.
இரண்டாவதாக செங்கல்பட்டு மாவட்டம் மொத்தம் 93 பதக்கங்களை வென்று இருந்தது. அதிக அளவில் தங்கப் பதக்கங்களை வென்றதால் இரண்டாவது இடத்தை பிடித்தது செங்கல்பட்டு மாவட்டம். 31 தங்கம், 26 வெள்ளி மற்றும் 36 வெண்கலங்களை வென்று இருந்தது செங்கல்பட்டு.
மூன்றாவது இடத்தை கோயம்புத்தூர் மாவட்டம் வென்றது. 23 தங்கம், 40 வெள்ளி மற்றும் 39 வெண்கலங்களுடன் 102 பதக்கங்களை வென்று இருந்தது கோயம்புத்தூர் மாவட்டம். சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்தன.
இந்த தொடர் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அக்டோபர் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் மாவட்டங்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
அதேபோல தமிழக அரசு சார்பில் சென்னையில் ஃபார்முலா ஃபோர் (Formula 4) கார் பந்தயம் நடத்தப்பட்டது. அக்டோபர் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் ஆகிய தேதிகளில் இந்த கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இவை இரண்டும் 2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட முக்கிய விளையாட்டுகளாக இருந்தன.