
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் தொடர்புடைய 81 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்திய வில்வித்தை அணியில் இடம் பெற்றுள்ள 3 வீராங்கனைகளில் நாகலாந்தை சேர்ந்த சேக்ரோவாலு ஸ்வ்ரோவும் ஒருவர். நாகலாந்து மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 2வது நபர் இவர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றால் நாகலாந்து மக்கள் அனைவரையும் பெருமைப்பட செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நாகலாந்தில் உள்ள அனைத்து சர்ச்சுகளிலும் எனக்காக சிறப்பு பிராத்தனை நடைபெற்று வருகிறது. மாநில முதல்வர் நிப்யூ ரே கூட எனக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்தார். லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியை காண, மாநில முதல்வர் நேரடியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை எனது வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியமான தருணம் என்று கருதுகிறேன். ஒலிம்பிக் போட்டியி்ல் நான் பங்கேற்பதை நினைத்து மாநில மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதன் மூலம் எனக்கு அதிக ஊக்கம் கிடைக்கிறது. மேலும் எனது பொறுப்பும் அதிகரிக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்பை நான் சிதைக்க விரும்பவில்லை.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற, நான் பல இக்கட்டான பாதைகளை கடந்து வந்துள்ளேன். எங்கள் மாநிலத்தில் வில்வித்தைக்கு தேவையான தகுந்த உபகரணங்களோ, வாய்ப்புகளோ இல்லை. ஆனால் அங்குள்ளவர்களுக்கு திறமைக்கு எந்த குறையும் இல்லை. இவ்வளவு தூரம் வாழ்க்கையில் கடந்து வந்துள்ள எனக்கு, இனி எல்லாம் நன்மையாக முடியும் என்று நம்புகிறேன்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நான் திரும்பினால், நாகலாந்து மக்கள் அனைவரையும் அது பெருமைப்படுத்தும் என்று நம்புகிறேன். எனக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த எனது மாநில மக்களுக்கு, நான் திரும்பி செலுத்தும் நேரம் வந்துவிட்டது என்றார்.